tamilnadu

img

சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு முட்டை வழங்கப்படுமா?: உயர்நீதிமன்றம்

சென்னை:
கொரோனா தொற்று அச்சத்தால் பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால், சத்துணவுத் திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு வழங்கிவந்த முட்டைகளை தொடர்ந்து வழங்குவது குறித்தும், மாணவிகளுக்கு நாப்கின் தொடர்ந்து வழங்குவது குறித்து விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனாவில் இருந்து பாதுகாத்துக் கொள்ள ஏதுவாக தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களில் ஏழை மக்களுக்கு  இலவச முட்டைகள் வழங்கவும், பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால், மாநிலம் முழுவதும் உள்ள சத்துணவு மையங்கள் மூலம் மாணவர்களுக்கு சத்துணவு வழங்க திட்டம் வகுக்கக்கோரியும் தமிழக மகிளா காங்கிரஸ் தலைவர் சுதா சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு வியாழனன்று நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ், ஹேமலதா அடங்கியஅமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சத்துணவு கூடங்கள் மூடப்பட்டுள்ள போதிலும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மூலம், குழந்தைகள், வளர் இளம் பெண் குழந்தைகள், கர்ப்பம் தரித் துள்ள பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய் மார்களுக்கு அரிசி, பருப்பு,சத்துமாவு, முட்டை ஆகியவற்றை அங்கன்வாடி பணியாளர்கள் சம்பந்தப்பட்டவர்களின் வீட்டிற்கே நேரடியாக சென்று வழங்கி வருவதாகவும், இதன் மூலம் இந்த ஊரடங்கு காலகட்டத்திலும் 33 லட்சத்து 12 ஆயிரத்து 629 பேர் பயனடைந்துள்ளதாக அரசு தரப்பில்  தெரிவிக்கப்பட்டது.

மேலும், சத்துணவுத் திட்டத்தின் மூலம் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் 42 லட்சத்து 61 ஆயிரத்து 124 மாணவ மாணவியருக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள்  சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடித்து வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டது..அதேநேரத்தில், கொரோனா தொற்று பரவி வருவதால் மாணவர்களை தினமும் பள்ளிகளுக்கு அழைத்து இலவச முட்டைகள் வழங்குவது பாதுகாப்பாக இருக்காது எனவும் தமிழக அரசு தெரிவித்தது.இதை கேட்ட நீதிபதிகள், கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு அரசு ஆசிரியர்கள் பணியின்றி வீட்டில் இருக்கும் இந்த சூழலில், அவர்கள் மூலமாக பள்ளி குழந்தைகளுக்கு முட்டை வழங்குவது குறித்து அரசு ஏன் பரிசீலிக்கக் கூடாது என கேள்வி எழுப்பினர்.

தினமும் இல்லாவிட்டாலும் வாரத்தில் ஒரு நாள் அடிப்படையில் கூட மொத்தமாக முட்டைகளை விநியோகிக்கலாம் எனவும் யோசனை தெரிவித்த நீதிபதிகள், அரசு பள்ளி மாணவிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த நாப் கின்களை தொடர்ந்து வழங்குவது தொடர் பாகவும், இவற்றை விநியோகிப்பது  குறித்தும் விளக்கமளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 3 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

;