சென்னை:
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சிபிஐ மேல் முறையீடு செய்ய வேண்டும் என்றும், அந்த வழக்கை முறை யாக நடத்தி குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையைப் பெற்றுத்தர வேண்டும் என்றும் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து அந்த மேடையின் ஒருங்கிணைப்பாளர்கள் பேரா. அருணன், க. உதயகுமார் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
பாபர் மசூதி இடிப்பு பற்றிய தீர்ப்பு 28 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் வெளிவந்துள்ளது. தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்பார்கள். இதுவோ தாமதிக்கப்பட்ட மற்றும் மறுக்கப்பட்ட நீதியாக உள்ளது. பாபர் மசூதி சங் பரிவாரத் தால் திட்டமிட்டு தகர்க்கப்பட்டது என்பது உலகறிந்த ரகசியம். ஆனால் குற்றவாளிகள் 32 பேருக்கு எதிராகப் போதிய ஆதாரங்களை சிபிஐ தரவில்லை என்று சொல்லி அவர்கள் அனைவரையும் விடுதலை செய்துள்ளது அதன் சிறப்பு நீதிமன்றம்.
28 ஆண்டுகளுக்குப் பிறகும் போதிய ஆதாரங்களைத் தரவில்லை என்பது சிபிஐயின் செயல்பாடு பற்றிய பலத்த சந்தேகத்தை எழுப்பியுள்ளது. மறுபுறம், இடிப்பை எல். கே. அத்வானி, முரளி மனோகர் ஜோசி உள்ளிட்டவர்கள் தடுக்க முயன்றார்கள் என்று நீதிமன்றம் கூறியிருப்பது அதற்கு மட்டும் போதிய ஆதாரங்கள் நீதி மன்றத் திற்கு கிடைத்திருந்ததா எனும் கேள்வியை எழுப்புகிறது. நீதி இங்கே குடை சாய்ந்திருக்கிறது.பாபர் மசூதி இருந்த இடம் யாருக்குச் சொந்தம் என்பது பற்றிய சமீபத்திய உச்சநீதி
மன்றத் தீர்ப்பில் 1992இல் பாபர் மசூதி இடிக்கப்பட்டது சட்டத்திற்குப் புறம்பான கொடுஞ்செயல், கிரிமினல் நடவடிக்கை என்று கடுமையாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. குற்றவாளிகள் அனைவரும் இப்போது விடுதலை செய்யப்பட்டிருப்பது அந்தத் தீர்ப்பின் உணர்வுக்கு முற்றிலும் விரோதமாக இருக்கிறது. இது நமது நீதிமன்ற முறைமை மீதான மக்களின் நம்பிக்கையைத் தகர்ப்பதாக உள்ளது.
450 ஆண்டுகளாக சிறுபான்மையோரின் வழிபாட்டுத்தலமாக இருந்தது சட்ட விரோதமாக இடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கொடூரக் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு எந்த தண்டனையும் கிடையாது என்பது அந்தச் சிறுபான்மையோருக்கு மட்டுமல்லாது மத நல்லிணக்கத்தில் நம்பிக்கையுள்ள அனைத்து மனிதநேயர்களுக்கும் அதிர்ச்சியாக உள்ளது. நீதிமன்றமே நீதி இல்லையா என ஏங்கும் நிலை வருவது ஒரு நாகரிக தேசத்தின் அடையாளம் அல்ல. எனவே இந்த அநீதி தீர்ப்பை எதிர்த்து சிபிஐ மேல் முறையீடு செய்ய வேண்டும் என்றும், அந்த வழக்கை முறையாக நடத்தி குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையைப் பெற்றுத்தர வேண்டும் என்றும் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை வலியுறுத்துகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.