tamilnadu

img

மக்கள் நலன்காக்கும் மாற்றத்திற்கு போராட உறுதியேற்போம்... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மே தின வாழ்த்து....

சென்னை:
மக்கள் நலன்காக்கும் மாற்றங்களுக்கு போராட மேதின நன்னாளில் உறுதியேற்போம் என்று மே தின வாழ்த்துச் செய்தியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள மே தின வாழ்த்துச் செய்தி வருமாறு:

அனைவருக்கும் உலகத் தொழிலாளர்களின் உரிமை தினமான மே தின நல்வாழ்த்துக்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.தொழிலாளர் வர்க்கம் புதிய உரிமைகளை பெறுவதற்காக மட்டுமல்ல, ஏற்கனவே போராடிப் பெற்ற உரிமைகளையும், சலுகைகளையும் பாதுகாப்பதற்கும் மிகப்பெரிய, நீண்ட நெடிய போராட்டத்தை நடத்த வேண்டியதன் தேவையை இந்த ஆண்டு மே தினம் உணர்த்தியிருக்கிறது.2019 ஆம் ஆண்டின் இறுதியில் துவங்கியகொரோனா பெருந்தொற்று எனும் கொடியநோயின் பிடியில் உலகம் சிக்கித் தவிக்கிறது.பலகோடி பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், 31,68,424  பேர் மரணமடைந்துள்ளனர்.  வேலை, வருமானம் இழப்பு போன்றவைகளால் மக்கள் மூச்சுத் திணறும்நிலையில்,  இந்தக்கொடிய தொற்றுக் காலத்திலும் பெருமுதலாளிகள்  கொள்ளை லாபம் ஈட்டியுள்ளதை உலகம் பார்த்துக்கொண்டுள்ளது.

மக்களை காக்கும் சோசலிச நாடுகள்
லாபவெறி மட்டுமே முதலாளித்துவத்தின் இயற்கை குணம் என்பதை உணர்த்துகிறது.   மறுபுறத்தில், சோசலிச நாடுகள் மக்களைப் பாதுகாப்பதில் முன் நிற்கின்றன. நோய் தொற்றை கட்டுப்படுத்தியதுடன் தடுப்பூசி, மருத்துவம் உள்ளிட்ட அனைத்து தேவைகளும் சோசலிசநாடுகளில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. முதலாளித்துவம் எனும் கொடிய நோய்க்கு சோசலிசமே மாமருந்து என்பதை இந்தக் காலம் அழுத்தமாக உணர்த்தியுள்ளது.இந்திய நாட்டில் நோய்த்தொற்றால் மக்கள் கொத்துக்கொத்தாக செத்து மடிந்துகொண்டுள்ளனர். மருத்துவமனைகள் நிரம்பிவழிகின்றன, தடுப்பூசி, மருந்து, ஆக்சிஜன் மற்றும் படுக்கை வசதிகளுக்காக மக்கள்  உயிருக்கு ஆபத்தான நிலையில் தவித்துக்கொண்டுள்ளனர்.   மேலும், இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய முடியாமல்  பலமணி நேரம் வரிசையில் காத்துக்கிடக்கின்றனர். திறந்தவெளிகளும் சுடுகாடுகளாக மாற்றப்பட்டு வரும் அவலநிலை.மோடி அரசு மக்களை பாதுகாப்பதில் பெருந்தோல்வி அடைந்துவிட்டது.  கொரோனாவை வெற்றிகரமாக கட்டுப்படுத்திவிட்டோம் என சவடால் பேசி, கொரோனா தொற்றை தடுக்க கிடைத்த பலமாத அவகாசங்களை வீணடித்து விட்டது.  

தடுப்பூசி தயாரிப்பை தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அனுமதி கொடுத்து பல்லாயிரம் கோடி ரூபாய் இந்நிறுவனங்கள் லாபம் ஈட்ட வழிதிறந்துவிட்டுள்ளனர்.  கொரோனா காலத்திலும்கார்ப்பரேட் நிறுவனங்களின் கொள்ளை லாபம் ஈட்டிக்கொடுக்கும் ஏஜெண்டாகவே மோடி அரசு செயல்பட்டுள்ளது. விலை மதிக்க முடியாத பல உயிர்களை இழந்ததற்கு காரணம் கொரோனாநோய் மட்டும் அல்ல அதைவிட கொடிய கொள்கைகளை கொண்ட மத்திய ஆட்சியாளர்கள்தான்.  
முன்களப் பணியாளர்களுக்கு நன்றிகொடுநோய்க்கு எதிராக மக்களைப் பாதுகாப்பதில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் என முன்களப் பணியாளர்கள்தான் களத்தில் நிற்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களையும் நன்றியையும் இந்த மே நாளில் தெரிவித்துக் கொள்கிறோம்.

விவசாயத்தை  விவசாயிகளிடமிருந்து பறிக்கும் கொடிய சட்டத்திருத்தங்களை எதிர்த்து தலைநகர் தில்லியில் விவசாயிகள் வீரஞ்செறிந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர். ஐந்து மாதங்களுக்கு மேல் பல உயிர்த்தியாகங்களை செய்து போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவராமல், கொரோனா தொற்று பரவிக்கொண்டுள்ளநிலையில், மோடி அரசு ஆணவத்தோடு செயல்பட்டு வருகிறது. இன்னொரு பக்கம் போராடும் விவசாயிகளுக்கு சவால் விடும் அளவில் அனைத்து உரங்களின் விலையையும் பலமடங்கு உயர்த்தி உள்ளது. உலக அளவிலான போராட்டங்களின் வரலாற்றை எழுதும்போது அதில், இந்திய விவசாயிகளின் இன்றைய போராட்டம் தனித்ததொரு அத்தியாயமாக திகழும்.
தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமைகளை பறிக்க முதலாளிகளின் ஆலோசனையை ஏற்று, தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்தியுள்ளது மோடி அரசு. வேலைவாய்ப்புகள் அனைத்தும் பறிக்கப்படுகிறது. பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி என மோடி அரசின் அடுத்தடுத்த கேடுகளால் நொறுங்கத் துவங்கிய தேசப் பொருளாதாரம், கொரோனா ஊரடங்கால் முற்றிலுமாக மூச்சடங்கிக் கிடக்கிறது.

தமிழகத்தில், சட்டமன்றத்தேர்தல் நடந்து முடிந்து முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. நாசகர பாஜக-அதிமுக கூட்டணி இத்தேர்தலில் படுதோல்வி அடைவது திண்ணம் என்கிற முறையில் கருத்துக்கணிப்புகள் வந்துகொண்டுள்ளன.
நாடு முழுவதும் உள்ளதைப்போலவே கொரோனா தொற்றால் தமிழக மக்களும் விழிபிதுங்கி உள்ளனர். தொற்று பரவலும், மரணங்களும் மக்களை பீதியடையச் செய்துள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உயிருக்குப் ஆபத்தானவர்களைக்கூட சேர்க்க வாய்ப்பில்லை. தடுப்பூசிக்கும் கொரோனா மருந்துக்கும் ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை வசதிகளுக்கும் மக்கள் படும் அவதி சொல்லி மாளாது.

மறுபக்கம் அறிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் சிறுவியாபாரிகள், சுற்றுலா பகுதிகளில் உள்ள மக்கள், வாகன உரிமையாளர்கள் மற்றும் வாகன ஓட்டிகள், திரையரங்க  உரிமையாளர்கள் அதன் ஊழியர்கள், முடிதிருத்துவோர் போன்ற சாதாரண ஏழை எளிய மக்கள் வாழ்வாதாரங்கள் பாதித்து பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். கட்டுப்பாடுகளை அறிவித்துக்கொண்டுள்ள அரசு, மக்களுக்கு நிவாரணங்கள் குறித்த அறிவிப்பை ஏதும் செய்யவில்லை. பசி பட்டினியோடு கொரோனா தொற்றை எதிர்த்துப்போராடும் நிலைக்கு சாதாரண மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் விவசாயம், தொழில்கள் அனைத்தும் முடங்கியுள்ளன. சமூக ஒடுக்குமுறை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சாதி வெறி  படுகொலைகள் தொடர்கின்றன.சமூகத்தில் சரிபாதியாக உள்ள பெண்களின் நிலை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. பொருளாதார சீரழிவால், முதலில் பாதிப்புக்குள்ளாவது பெண் தொழிலாளர்கள்தான். பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் அதிகரித்து வருகிறது.  மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக மதவெறியைத் தூண்டுவதில் ஆர்எஸ்எஸ் பரிவாரம் முனைப்பாக உள்ளது. இன்றைக்கு தேசம் சந்திக்கும் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் அடிப்படை காரணமாக இருப்பது இந்துத்துவா கும்பலின் நாசகர கொள்கைகளே ஆகும். மதச்சார்பின்மை, கூட்டாட்சி, சமூக நீதி, மொழிகளின் சமத்துவம், மாநில உரிமை, ஜனநாயகம் என அனைத்து மாண்புகளையும் நரபலி கேட்கிறது இந்தக் கூட்டம்.

கொரோனா தொற்றிலிருந்து மக்களை காப்போம், சாதி மதவெறி சக்திகளை முறியடிப்போம், அனைத்து உழைப்பாளி மக்களின் உரிமைகளுக்காகவும், நல்வாழ்விற்கான திட்டங்களுக்காகவும் போராடுவோம்.    இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கட்சியின் மே தின வாழ்த்து செய்தி தொகுப்பு 1 மற்றும் 3-ஆம் பக்கம் என இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. தோழர்கள் தொடர்ந்து படிக்கும் வசதிக்காக ஒரே தொகுப்பாக இதில் கொடுக்கப்பட்டுள்ளது.   

;