தமிழக காவல்துறைக்கு வாக்கி-டாக்கி வாங்கியதில் முறைகேடு புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீஸார், எஸ்பி, டிஎஸ்பிகளுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழக காவல்துறைக்கு வாக்கி-டாக்கி வாங்குவதற்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டது. ஒப்பந்தம் வழங்கப்பட்ட 16 மாவட்டங்களில் 10 மாவட்டங்களில் ஒரே நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக காவல்துறை தலைமை இயக்குநருக்கு உள்துறை செயலர் நிரஞ்சன் மார்டி கடிதம் எழுதியிருந்தார். அதில், வாக்கி-டாக்கி வாங்குவதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரிய மோட்டோரோலா சொல்யூசன்ஸ் நிறுவனத்திற்கு 83.45 கோடி ரூபாய்கான ஒப்பந்தத்தை காவல்துறை தலைமை இயக்குநர் வழங்கியுள்ளதாக குறிப்பிட்டிருந்தார். இதில், மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்திருக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதைத்தொடர்ந்து இன்று, 2016ஆம் ஆண்டு தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றிய காவல்துறையினருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர். அப்போது பொறுப்பிலிருந்த எஸ்பி, டிஎஸ்பி வீடுகளிலும், சொந்தமான இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள டிஎஸ்பி வீடு உள்பட பல்வேறு இடங்களில் சோதனை நடைபெறுகிறது. முறைகேடு குறித்தான ஆவணங்களை திரட்டவே இந்த சோதனை நடத்தப்படுகிறது.