tamilnadu

img

ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காக ஊதியம் பறிப்பு தமிர்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் எதிர்ப்பு

சென்னை,ஆக.02- ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காக சத்துணவு  ஊழியர்களின் ஊதியம் பறிக்கப்பட்டதற்கு சத்துணவு ஊழியர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர்  ப.சுந்தரம்மாள், பொதுச்செயலாளர் அ.நூர்ஜஹான் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  தமிழகத்தில் கொரானாவைரஸ் தொற்றின் காரணமாக மார்ச் 16 ஆம் தேதிஅனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. சத்துணவு உண்ணும் குழந்தைகளுக்கு தினமும் இஞ்சி, பூண்டு, மிளகுஉணவில் சேர்க்கப்பட்டு தினமும்  முட்டை வழங்குவதன் மூலமாக புரதச்சத்து  வைட்டமின் சத்துகள் அதிகம் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால் இன்று விடுமுறை யின் காரணமாக மதிய உணவு கிடைக்காத பட்சத்தில் சத்து குறைவான குழந்தை களாக உருவாகக்கூடிய சூழல்  ஏற்பட்டுள்ளது.  ஆதலால் சத்துணவு சமைத்து வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டால் சத்துணவு ஊழியர்கள் அனைவரும் சமூக இடைவெளியோடு சத்துணவு வழங்குவதற்கு தயாராக இருக்கிறோம் என்பதை தெரிவிக்கும் விதமாக சத்துணவு மற்றும் சமூக நல ஆணையாளர் மற்றும் முதன்மை செயலாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

சத்துணவு உண்ணும் குழந்தைகளுக்கு பணமாக வங்கியின் மூலம் பெற்றோர்களின் வங்கிக் கணக்கில் அனுப்புவதற்கு அரசாங்கம் துரிதமாக செயல்பட்டது. இதனை தவிர்த்திடவும் சத்துணவு ஊழியர்களின் பிரதானமான கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஜூலை 7 அன்று தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் விதமாக ஜனநாயக முறைப்படி தனிமனித இடைவெளியோடு முகக்கவசம் அணிந்து அனைத்து ஒன்றியங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஏழை,எளிய குழந்தைகளுக்கு தமிழக அரசு சத்துணவு வழங்க நடவடிக்கை எடுக்காத சூழ்நிலையில் குழந்தைகளின் நலனை கருதி ஆர்ப்பாட்டம் விடுமுறை தினத்தில் நடைபெற்றது .இது எந்தவிதத்தில் தவறு . தற்பொழுது அனைத்துத் துறைவாரி சங்கங்களும் தன்னுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற  ஆர்ப்பாட்டம் நடத்தும் சூழ்நிலையில் சத்துணவு ஊழியர்களுக்கு மட்டும் ஒருநாள் ஊதியத்தை பிடிக்க வேண்டுமென்று ஆணையாளரிடம் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜனநாயகப் பூர்வமாக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் விதமாக நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஊழியர்கள் குறைந்த ஊதியத்தில் வாழ்க்கை நடத்திவருகிறார்கள் என்பதை அறிந்தும் ஒரு நாள் ஊதியம் பிடித்தம் என்பது ஊழியர் மத்தியில் மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஊதியப்பிடித்த  ஆணையை ஆணையாளர் திரும்பப்பெற வேண்டும் . மேலும் சமுகநலத்துறை அமைச்சர் பத்திரிகை செய்தியில் சத்துணவு உண்ணும் குழந்தைகளுக்கு அரிசி,பருப்பு,எண்ணெய் வழங்குவதாக தவறுதலாக தெரிவித்து (அரிசி, பருப்பு மட்டும் வழங்க உத்தரவு வழங்கிவிட்டு எண்ணெய் வழங்குவதாக) இருப்பது மக்கள் மத்தியில் சத்துணவு ஊழியர்களுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்திய நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு அனைத்து சத்துணவு ஊழியர் களின் சார்பாக கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் தமிழகத்தில் அதுவும் விடுமுறை காலத்திலும் வேலை நேரம் முடிந்த பின்  ஆர்ப்பாட்டம் நடத்தினால் ஊதியப் பிடித்தம் செய்வதை உடனே தடுத்து நிறுத்திட வேண்டும் .இல்லையெனில் அடுத்தகட்ட இயக்க நடவடிக்கைக்கு செல்ல வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்படும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.