பத்மபூஷன் விருது பெற்ற தமிழ்நாட்டின் புகழ்பெற்ற தொல்லியல் மற்றும் கல்வெட்டு ஆய்வாளர் இரா.நாகசாமி காலமானார்.
பல தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு நூல்களை எழுதியுள்ள இரா.நாகசாமி, சேக்கிழாரின் பெரியபுராண வரலாற்று பாதை குறித்த ஆய்வுப்பணிக்காக தமிழக அரசின் கலைமாமணி விருதினை பெற்றார். மேலும், லண்டன் நடராஜா வழக்கில் லண்டன் உயர்நீதிமன்றத்தில் நிபுணத்துவ சாட்சியாக இரா.நாகசாமி ஆஜரானார், இவருக்கு 2018ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.
1930ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் தேதி பிறந்த இவர் சென்னை பல்கலைக் கழகத்தில் சம்ஸ்கிருத மொழியில் முதுநிலை பட்டப்படிப்பு முடித்தவர். தொல்லியல் படிப்பை படித்த இவர் 1963 முதல் 1966ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை அதிகாரியாகவும், 1966 முதல் 1988 வரை தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் முதலாவது இயக்குநராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.