அன்னூர், மே 12-அன்னூர் சிஎஸ்ஐ சர்ச் அருகில் உள்ள தரைமட்ட பாலத்தை சீரமைத்து விபத்துக்களை தடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அன்னூர் ஒன்றியத்துக்குட்பட்ட சிஎஸ்ஐ சர்ச் அருகில் தரைமட்ட பாலம் பல ஆண்டுகளுக்கு முன்பே கட்டப்பட்டுள்ளது. சக்தி சாலைக்கு எளிதில் செல்ல இவ்வழியை வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர். தரைமட்ட பாலம் எனப்பட்டாலும் இதன்அதிகமான உயரம் காரணமாக இரண்டு சக்கர வாகனங்களில் செல்வோர்க்கு விபத்து ஏற்பட்டு கீழேவிழுந்து படுகாயம் ஏற்படுகின்றது. நான்கு சக்கரவாகனங்கள் சென்றால் வாகனத்தின் அடிப்பகுதிதரைப்பகுதியில் மோதி மிகவும் சேதம் அடைகின்றது. இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு அவ்வழியாக நான்கு சக்கர வாகனங்கள் செல்லக் கூடாது என்று தடுப்பு கம்பி அமைக்கப்பட்டது. தற்போது தடைக் கம்பி அகற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து சிபிஎம் சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தி துறை ரீதியாக நடவடிக்கை எடுத்து பாலத்தை சீரமைக்க வேண்டும் என அதிகாரிகளிடம் மனு அளித்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதன் காரணமாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தரைமட்ட பாலத்தை சீரமைத்து விபத்துகளை தடுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.