நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் மற்றும் 22 தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தல் ஆகியவற்றில் அதிமுக நிர்வாகிகளுக்குத் தலைமை மூலம் வழங்கப்பட்ட தேர்தல் செலவுக்கான தொகை முறையாகச் செலவழிக்கப்படவில்லை என்று தேர்தல் முடிந்த சில நாட்களிலேயே முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குத் தகவல் சென்றது.
பணப்பட்டுவாடாவில் ஒதுக்கலும் பதுக்கலும் நடைபெற்றிருப்பதை உறுதி செய்துகொண்ட எடப்பாடி இதுபற்றி ஒவ்வொரு வேட்பாளருக்கும் செலவுக் கணக்கைத் தலைமையிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.
இந்த வகையில் பல வேட்பாளர்கள் தங்கள் தொகுதியில் நடந்த தேர்தல் செலவினங்கள் விவகாரம் குறித்து தனித்தனியாகத் தலைமையிடம் புகார் அளித்தனர். அதனடிப்படையில் மே 19 அன்று முன்னாள் அமைச்சர் வளர்மதியைத் தனது கிரீன்வேஸ் ரோடு இல்லத்துக்கு வரச் சொல்லியுள்ளார் எடப்பாடி.
சென்னை சுற்றுப்புறத் தொகுதிகளுக்குத் தலைமையால் வழங்கப்பட்ட பணம் சரியாக விநியோகிக்கப்பட வில்லை என்பது பற்றி தனக்கு வந்த புகார்களை வளர்மதியிடம் கூறி விளக்கம் கேட்டுள்ளார் எடப்பாடி. அதற்கு வளர்மதி, ‘என்னிடம் கொடுத்ததெல்லாம் நான் கொடுக்க வேண்டியவர்களுக்கு சரியா கொடுத்துவிட்டேன்’ என்று பதில் சொல்ல, கோபமாகியிருக்கிறார் முதல்வர்.
‘நீங்க என்ன இப்படி சொல்றீங்க? நீங்க யார் யாருக்குகொடுத்தீங்கன்னு சம்பந்தப்பட்டவர்களுக்கு இப்பவே போன் போடட்டுமா? அவங்க என்ன சொல்றாங்கன்னு கேட்போமா?’ என்று வளர்மதியிடம் சீறியிருக்கிறார்.இதற்குப் பதில் ஏதும் சொல்லாமல் முதல்வர் வீட்டிலிருந்து வெளியே சென்றுவிட்டார் வளர்மதி. அதன்பின் தனக்கு நெருக்கமானவர்களிடம், “நான் இவரைவிட கட்சியில் சீனியர். ஆனால், என்கிட்டயே இவ்வளவு அதிகாரமா நடந்துக்குறாரு” என்று கோபமாகச் சொல்லியிருக்கிறார் வளர்மதி.
நன்றி : மின்னம்பலம் இணைய இதழ்