சென்னை, ஏப்.23-
சர்வதேச சந்தை விலைச் சரிவின் பலனை நுகர்வோருக்கு வழங்க பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது அக்கட்சியின் மாநிலச் செயலாளர் இரா முத்தரசன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் பெரும் வீழ்ச்சி அடைந்துள்ளது. ஆனால், இந்திய எண்ணெய் நிறுவனங்கள் விலைச் சரிவின் பலனை எரிபொருள் நுகர்வோருக்கு செல்லாமல் தடுத்து, வழிப்பறி செய்து வருகின்றன.
இந்திய அரசு எண்ணெய், எரிபொருள் விலை நிர்ணயம் செய்யும் உரிமையை எண்ணெய் நிறுவனங்களிடம் ஒப்படைத்து, எரிபொருள் நுகர்வோர் நலனை மத்திய அரசு கை கழுவி விட்டதன் விளைவு தான் சர்வதேச சந்தையில் விலை வரலாறு காணாத அளவில் வீழ்ச்சி ஏற்பட்டும் அதன் சில்லறை விற்பனை விலை குறையாமல் இருப்பதன் காரணமாகும்.
இதற்கிடையில் மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீது லிட்டருக்கு தலா ரூபாய் 3 வீதம் கலால் வரியை உயர்த்திக் கொண்டது. இந்த மக்கள் விரோதக் கொள்கைகளை கைவிட்டு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியைக் கருத்தில் கொண்டு பெட்ரோல், டீசல் விலையை பெருமளவு குறைக்க மத்திய அரசும், எண்ணெய் நிறுவனங்க ளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.