tamilnadu

img

போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்.... 85 சதவீத பேருந்துகள் ஓடவில்லை.... போராட்டம் தொடரும்... தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவிப்பு...

ஊதிய ஒப்பந்தம் மற்றும் ஓய்வூதிய பலன்களை வழங்கக்கோரி போக்குவரத்துத் தொழிலாளர்கள் பிப்ரவரி 25 ஆம் தேதியன்று வேலைநிறுத்தப் போராட்டத்தை துவக்கியுள்ளனர். போக்குவரத்து தொழிற்சங்க தலைவர்களை அழைத்து உடனே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

போக்குவரத்து ஊழியர்களுக்கு 19 மாத காலமாக நிலுவையில் உள்ள ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக நடத்தி தீர்வு காண வேண்டும்; ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு 5 வருட காலமாக வழங்க வேண்டிய பஞ்சப் படியையும், ஓய்வூதிய கால பலன்களையும் உடனடியாக வழங்கிட வேண்டும்; தொழிலாளர்களுக்குரிய 8000 கோடி ரூபாய் பணத்தை எடுத்து செலவு செய்த தமிழக அரசு, அந்த தொகையை மீண்டும் அவரவர் கணக்கில் செலுத்த வேண்டுமென்றும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஒன்றரை  ஆண்டு காலமாக போக்குவரத்து தொழிலாளர்கள் பல்வேறு கட்ட இயக்கங்களை நடத்தி வருகின்றனர். இதை தமிழக அரசு அலட்சியம் செய்த காரணத்தினால் தொழிலாளர்கள் பிப்ரவரி 25 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் இறங்கியுள்ளனர்.

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக, தமிழக அரசு போராட்டத்தில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு சம்பளம் வெட்டு, துறை ரீதியான நடவடிக்கை என கடுமையான அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்டுள்ளது. இந்நடவடிக்கை போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்துவதற்கே வழி வகுக்குமே தவிர, சுமூகத் தீர்வு காண்பதற்கு உதவாது என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது.
எனவே, ஏழை, எளிய மக்களுக்காக சேவைபுரியும் போக்குவரத்து தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டுமெனவும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து சங்க தலைவர்களையும் உடனடியாக அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வு காண வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.

;