tamilnadu

img

அரசு கல்லூரிகளுக்கு மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்க கால நீட்டிக்க கோரிக்கை

சென்னை:
அரசு கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கால நீட்டிப்பு தேவை என்று தமிழ்நாடு முதலமைச்சருக்கு மாற்றுத்திறனாளிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.நடப்பு கல்வியாண்டில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர முழுமையாக ஆன்லைன் விண்ணப்ப முறையை கல்லூரி கல்வித்துறை அமல்படுத்தியது.  ஜூலை 21 முதல் 31 ஆம் தேதி வரை 11 நாட்கள் மட்டுமே அவகாசம் கொடுத்தது. இந்த கெடு தேதி, தொலைதூர குக்கிராமங்களுக்கு முழுமையாக சென்று சேரவில்லை.
 பொதுப்போக்குவரத்து முடக்கப்பட்டிருப்பது, கிராமப்புறங்களில் போதுமான இணையதள செயல்பாடு இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் மாநிலம் முழுவதும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் குறித்த நேரத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியவில்லை. இதில் மாற்றுத்திறன் மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 இதுகுறித்து தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும்பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநிலத் தலைவர் பா.ஜான்சிராணி செயலாளர் எஸ். நம்பிராஜன் ஆகியோர் விடுத்திருக்கும் அறிக்கையில், “அரசு கலை கல்லூரிகளில் சேர வாய்ப்பிருந்தும், குறித்த நேரத்தில் விண்ணப்பிக்க முடியாத ஏழை மாணவர்கள் தனியார் கல்லூரிகளில் அதிக கட்டணம் செலுத்தி சேர வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.எனவே, ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க ஜூலை 31 ஆம் தேதியுடன் கல்லூரி கல்வித்துறை கறாராக நிறுத்திக்கொண்டாலும், அரசு கல்லூரிகளில் சேர்க்கை இதுவரை நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 எனவே, ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க மேலும் ஒரு வார காலம் அவகாசம் நீட்டித்து, பாதிக்கப்பட்டுள்ள கிராமப்புற ஏழை மாணவர்கள் அரசு கல்லூரிகளில் சேர்ந்திட வாய்ப்பளிக்க கல்லூரி கல்வித்துறை உரிய நடவடிக்கைகளை எடுக்க முதலமைச்சர் உத்தரவிட வேண்டும்” என்று வலியுறுத்தினர்.

மாணவர்களுக்கு உதவி
மாற்றுத்திறன் மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதில் உள்ள சிரமங்களை களைய, அவர்கள் படித்த பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர்கள் மூலம் வழிகாட்டுதல், உதவிகள் செய்ய முதலமைச்சர் உத்தரவிட வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

;