tamilnadu

img

மக்களைப் பிரித்து ஒடுக்குகிற சக்திகளுக்கு எதிராக ஒன்றிணைந்து போராடுவோம்- பினராயி விஜயன்

மக்களைப் பிரித்து ஒடுக்குகிற சக்திகளுக்கு எதிராக ஒன்றிணைந்து போராடுவோம் என்று கேரள மாநில முதல்வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான பினராயி விஜயன் கூறினார்.

சென்னையில் திங்களன்று நடைபெற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய, “ உங்களில் ஒருவன்’’ நூல் வெளியீட்டு விழாவில் அவர் பேசியதாவது:

மு.க. ஸ்டாலின்  சுயசரிதையான ‘உங்களில் ஒருவன்’ புத்தக வெளியீட்டில் உங்கள் அனைவரோடும் இருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். ஒரு மலையாளியாக, நான் இங்கு இருப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், ஏனென்றால் கேரளாவும் தமிழ்நாடும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அன்பான உறவுகளைக் கொண்டுள்ள மாநிலங்கள் ஆகும்.  மலையாளிகளும் தமிழர்களும் ஒரே மண்ணின் மைந்தர்கள். நாம் சகோதர சகோதரிகள். நமது சகோதர உறவுகள் மேலும் வலுப்பெற வேண்டும் என்பதில்  ஸ்டாலின்  எப்போதும் ஆர்வமாக உள்ளார். இரு மாநிலங்கள் தொடர்பான அனைத்து விஷயங்களிலும், கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களின் நலன்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய முயற்சித்துள்ளார். கேரள மக்கள் சார்பாக, எங்கள் அரசும் அதை உறுதிப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
உடன்பிறப்புகளாகிய நமது மக்களின் உறவு, மேலும் செழுமைப்படுத்தப்பட்டு, நம் நாட்டு மக்கள் பயன்பெறும் என்று நம்புகிறேன்.  திராவிட இயக்கம் அதன் தொடக்கத்திலிருந்தே, ஆதிக்கக் சக்திகளை கேள்விக்குள்ளாக்குவதிலும், விளிம்புநிலை மக்களுக்காகவும்  மாநிலத்தின் உரிமைகளுக்காகவும்  போராடுவதிலும் முக்கிய பங்கு வகித்துள்ளது. மூடநம்பிக்கைகள் மற்றும் முறைகேடுகளுக்கு எதிராகவும், தர்க்கம், பகுத்தறிவு மற்றும் விஞ்ஞான கண்ணோட்டத்தில் செயல்படுவதிலும் முன்னணி இயக்கமாகும்.
 இந்திய சமூகத்தின் பன்முக கலாச்சார மற்றும் பன்மை கண்ணோட்டத்தை பாதுகாத்தல் மற்றும் வலுப்படுத்துதல் மற்றும் தாய்மொழிகளை வளப்படுத்துதல் ஆகியவற்றில திராவிட இயக்கம் அதிக கவனம் செலுத்தி வருகிறது.  திராவிட அரசியலின் இந்த மரபு, நமது நாட்டின் பல்வேறு பகுதிகளில் தோன்றிய மறுமலர்ச்சி இயக்கங்களை பிரதிபலிக்கிறது.
கலைஞர் கருணாநிதியிடம் இருந்ததைப் போலவே,  ஸ்டாலினிடம்  திறமையும் அனுபவமும் உள்ளது. மாநில அளவிலான தலைவராக ஆவதற்கு முன்பு சென்னை மாநகராட்சியின் மேயர், உள்ளாட்சித்துறை அமைச்சர், துணை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் என பதவி வகித்து, தமிழக முதல்வராக பதவியேற்றுள்ளார். பல்வேறு நிலைகளில் மக்களுடன் இணைந்து நின்ற அவரது பரந்த அனுபவம், இன்று அவரது தலைமை பன்பில் நிச்சயமாக பிரதிபலிக்கிறது.  
கூட்டாட்சித் தத்துவம் தாக்குதலுக்கு உள்ளாகும் போதெல்லாம் அதைக் பாதுகாக்க குரல் கொடுக்கும் முன்னணி தலைவராக ஸ்டாலின்திகழ்கிறார்.  

மாநிலங்களின் உரிமைகள் மற்றும் அதிகாரங்கள் நசுக்கப்பட முற்படும்போது, அவற்றைப் பாதுகாப்பதில் அவர் துணிச்சலாக நிற்கிறார். இந்தியாவின் பல்வேறு கலாச்சாரங்கள், மொழிகள் மற்றும் நம்பிக்கைகள் சிறுமைப்படுத்தப்பட்டு ஒடுக்கப்படும்போது, அவர் அவற்றைப் பாதுகாப்பதில் சந்தேகத்திற்கு இடமின்றி செயல்படுகிறார்.

நமது பன்முகத்தன்மை, கூட்டாட்சி, மதச்சார்பின்மை மற்றும் அரசியலமைப்பு, ஜனநாயகம் ஆகியவற்றை பாதுகாப்பதற்காக நாம் ஒற்றுமையாக நிற்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். வகுப்புவாத மற்றும் சர்வாதிகார சக்திகளுக்கு எதிராக அவர் தொடர்ந்து போராடுவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
 

ஸ்டாலினும் நானும் அவசரநிலை  காலத்தில் கடுமையான சட்டங்களின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டோம். நமது அடிப்படைச் சுதந்திரம் பறிக்கப்படும் போதும் அநீதிகளுக்கு எதிராகவும் அமைப்பு ரீதியாக போராடுவது என்பது நமக்கு இயல்பாகவே உள்ளது. நம்மைப் பிளவுபடுத்துவதற்கும் நம்மை ஒடுக்குவதற்கும் அரசு அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துபவர்களுக்கு எதிரான போராட்டத்தை ஒருங்கிணைப்பதில் அவர் தீவிரமாக உள்ளார்.  
 

ஸ்டாலின்  சுயசரிதையான ‘உங்களில் ஒருவன்’ முதல் பாகம் வெளியாகிறது. அவர் பிறந்தது முதல் தேசிய அவசரகாலத்தின் போது சிறைவாசம் வரையிலான அவரது வாழ்க்கையின் முதல் 23 ஆண்டுகளின் விரிவான தகவல்கள் இதில் இடம்பெற்றுள்ளது. அவர் பிறந்து வளர்ந்த வீடு, பள்ளி மற்றும் கல்லூரி நாட்கள், பெரியார் மற்றும் அண்ணாவுடனான அவரது தொடர்பு, மாணவர் பருவத்தில் அவரது ஆரம்ப அரசியல் செயல்பாடு, நாடகம் மற்றும் சினிமாவில் அவரது பங்களிப்பு, அரசியல் பிரச்சாரங்களுக்கு நாடக வடிவங்களைப் பயன்படுத்துதல், தி.மு.க.வின் இளைஞர் அணி, தி.மு.க.வுக்கான அவரது உள்ளூர் மட்டப் பணி மற்றும் கட்சியின் உள்ளூர் மட்டத் தலைமைக்கான அவரது தேர்தல் மற்றும் அவரது திருமணம் ஆகியவை 27 அத்தியாயங்களில் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளன.
 

‘உங்களில் ஒருவன்’  ஸ்டாலின் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையின் கதை மட்டுமல்ல. இது தமிழக அரசியலின் சமூக  அரசியல் வரலாற்றை சொல்லும் நூலுமாகும்.  திராவிட அரசியலுடன் பின்னிப்பிணைந்துள்ள இலக்கிய, பண்பாடு குறித்த ஒரு பார்வையை நமக்குத் தருகிறது. தமிழ்நாட்டின் இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே திராவிட அரசியல் எவ்வாறு ஊடுருவியது என்பதை இதில் அறிந்து கொள்ள முடிகிறது. ஒருவரின் தாய்மொழியை பாதுகாக்க மேற்கொள்ளப்பபட்ட போராட்டத்தை சொல்கிறது.
 

 மக்கள் மீது அவர் கொண்டிருந்த அன்பும் அக்கறையும் பாசமும் இந்நூலில் பிரதிபலிக்கிறது.  எப்பொழுதும் முடிந்த அளவு புத்தகங்களைப் படிக்க முயல்பவன் என்ற முறையில், ‘உங்களில் ஒருவன்’ நூலின் அடுத்தடுத்த பாகங்களுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். அவரது இந்த சுயசரிதை நூல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்று நம்புகிறேன்.
 

என்னையும் இந்நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்க அழைத்தமைக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன், நூலாசிரியர்  ஸ்டாலினுக்கு மார்ச் 1 அவரது பிறந்தநாள் என்று நான் நினைக்கிறேன். அவருக்கு முன்கூட்டியே பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு பினராயி விஜயன் பேசினார்.