சென்னை,ஜூலை 17 விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய கனரக வாகன ஓட்டுனருக்கு சென்னை பார்வதி மருத்துவமனையில் இலவசமாக மேற்கொள்ளப்பட்ட கணுக்கால் மற்றும் கால் தொடர்பான சிக்கலான அறுவை சிகிச்சை மூலம் அவரது உடலுறுப்பு மீட்கப்பட்டதுடன் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பவும் உதவியது. 33 வயது நிரம்பிய அந்த ஓட்டுநருக்கு விபத்து காரணமாகக் கணுக்கால் மற்றும் வலது காலில் கடுமையான காயங்களால் எலும்பு முறிவு ஏற்பட்டது. நரம்பு காயம் காரணமாக மரத்துப் போன நிலையில் காலையும், கணுக்காலையும் அசைக்க முடியவில்லை. காலை வெட்டி அகற்றவேண்டிய கட்டத்தில் சிக்கல் நிறைந்த புதுமையான ஒற்றை அறுவை சிகிச்சை மூலமாக அந்த நபர் மீட்கப்பட்டதுடன் விரைவிலேயே இயல்பு நிலைக்கு திரும்பவும் முடிந்தது என்று மருத்துவமனையின் முடநீக்கியல் துறை இயக்குனர் டாக்டர் தர்மராஜ் கூறினார். இவர் தலைமையிலான மருத்துவர்கள் குழு நோயாளியை உடனடியாகப் பரிசோதித்து அவரது இடுப்பு மூட்டுக் கிண்ணக் குழுவில் அறுவை சிகிச்சையைச் செய்து முடித்தது. தொடர்ந்து காயம் மற்றும் சருமத்தை மூட ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சைகள் நடத்தப்பட்டன. நோயாளிக்குக் காய மேலாண்மை முழுமையடைந்த பின்னர் சிக்கலான மற்றும் புதுமையான டிபியோடேலொகால்கெனால் (டிடிசி) ஃப்யூஷன் நெயில் ஒற்றை அறுவை சிகிச்சை வெற்றிகரமாகச் செய்து முடிக்கப்பட்டது என்று மருத்துவமனையின் தலைவரும் முதன்மை முடநீக்கியல் அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் எஸ் முத்துக்குமார் கூறினார். நோயாளியின் பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு இந்த சிகிச்சையை இலவசமாகச் செய்து முடித்தோம் என்றும் அவர் தெரிவித்தார்.