tamilnadu

செண்பகத் தோப்பு அணை சீரமையும் வரை போராட்டம் ஓயாது

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை வட்டம் கான மலை ஊராட்சிக்குட்பட்ட எழில் கொஞ்சும் ஜவ்வாது மலையின் அடிவாரத்தில் உள்ளது. செண்பகத்தோப்பு மலை கிராமம். இந்த கிராமத்திற்கு அருகில் செண்பகத்தோப்பு நீர்த்தேக்கம் கட்ட  2006 ஆம் ஆண்டு தமிழக அரசு ரூ. 34 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. இந்த நீர்த்தேக்கத்தின் மூலம் 46 ஏரிகளில் நீரை தேக்க முடியும் 36 கிராமங்களில் உள்ள விவசாயிகள் ஏறத்தாழ 1693 ஹெக்டேர் பரப்பளவு நிலத்திற்கு பாசன பயன்பாட்டை உருவாக்க முடியும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஊழல்

அணை கட்டிமுடிக்கப்பட்டாலும் கரை, மதகு தரமில்லாமல் கட்டப்பட்டதால் விவசாயிகள் பயன்படுத்த முடியவில்லை. கால்வாய்கள் கட்டி முடிக்காமல் மிகப்பெரும்  ஊழல் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பிறகு,  அதிகாரிகளின் மீது குற்ற வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கைகள் எடுத்ததாக செய்தித்தாள்களில் தகவல்கள் வெளியாகின. இது மக்களுக்கும் விவசாயிகளுக்கும் பேரதிர்ச்சியானது. மக்களின் வரிப்பணத்தில் செலவழிக்கப்பட்டு கட்டிய அணையை விவசாயிகள் பயன்படுத்த முடியாமல் கடந்த 13 ஆண்டுகளாக சீரழிந்த நிலையிலேயே உள்ளது. விவசாயிகளின் எண்ணங்களும் கானல் நீரானது. 

விவசாய இயக்கத்தின் தலையீடு

அகில இந்திய அளவிலும் தமிழகத்திலும் விவசாயிகளின் நலனில் மிகுந்த அக்கறையோடு செயல்படும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் செண்பகத்தோப்பு அணையை முழுமையாக ஆய்வு செய்தனர். அணையைச் சுற்றியுள்ள கிராமப்புறங்களில் உள்ள சமூக ஆர்வலர்கள் ,ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்,  ராணுவ வீரர்கள், விவசாயிகள் என அனைவரையும் சந்தித்து ஒருங்கிணைத்து செண்பகத்தோப்பு அணை பாதுகாப்பு மற்றும் பயன் பெறுவார்கள் நலச் சங்கம் என்ற பெயரில் அமைப்பை உருவாக்கினர். அணை கட்டி முடிக்கப்பட்ட நாளிலிருந்து பயன்பாடு இல்லாமல் சீரழிந்து கிடக்கும் செண்பகத்தோப்பு அணையை மறுசீரமைப்பு செய்து விவசாயிகளின் பயன்பாட்டிற்கு கொண்டுவர திட்டமிட்டார்கள். முதற்கட்ட பணியாக தமிழக முதல்வர், அமைச்சர்கள் உள்பட சம்பந்தப்பட்ட துறைக்கும் விரிவான அறிக்கை ஒன்றை தயார் செய்து அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து பிரச்சாரம், கையொழுத்து இயக்கம், உண்ணாவிரதம், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் என பல கட்டப் போராட்டமும் நடத்தினர்.

இந்த போராட்டத்தின் விளைவாக தமிழக அரசு அணையின் மதகுகளை சீர்படுத்த ரூ. 16. 37 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இது நமது போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. ஆனால் விவசாயிகள் முழுமையாக நீர்த்தேக்கத்தை பயன்படுத்த வேண்டுமானால் அணையின் கரையை பலப்படுத்தவும் இணைப்பு கால்வாய்களை சீர்படுத்தவும் போதுமான நிதியை ஒதுக்ககி அப்பணிகளை விரைந்து முடிக்கும் வரைக்கும் போராட்டத்தை முன்னெடுப்போம்.


-ப.செல்வன்
மாவட்ட செயற்குழு சிபிஎம்