tamilnadu

img

கல்விகொள்கைக்கு எதிராக கருத்து சொல்லும் போராட்டம்

கும்மிடிப்பூண்டி ,ஜூலை 28 புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக நேரடியாக கருத்து சொல்லும் போராட்டம் திங்களன்று ஜூலை 29  சென்னையில் நடை பெறும் என இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் வீ.மாரியப்பன் தெரி வித்துள்ளார். கும்மிடிப்பூண்டி அருகே உள்ள கவரைப்பேட்டையில் தேசிய கல்விக் கொள்கை வரைவு நகலை எதிர்த்து சனிக்கிழமை (ஜூலை 27)   பேரணி, பொதுக்கூட்டம் நடைபெற்றது.  இதில்  பேசிய அவர், புதிய கல்வி கொள்கை அமல் படுத்தினால் இளைய தலைமுறையினரின் கல்வியும், அவர்களின் எதிர்கால கனவும் பறிபோகும்.  உலகத்திலேயே நல்ல கல்வியை கொடுக்கும் பின்லாந்து, இலவசமாக கல்வியை வழங்கும் கியூபா போன்ற நாடுகளில் கூட 6-வயதில் தான் குழந்தைகளை பள்ளியில் சேர்க்கின்றனர். 3-வயதில் தேர்வு மூலம் அறிவை சோதிப்பது எந்த வகையில் ஏற்புடையது?  தேசிய கல்விக் கொள்கை அமலானால்,  கல்வி என்பது ஏழை குழந்தைகளுக்கு இல்லை என்ற நிலை உருவாகும். பெரும் முதலாளிகளுக்கான கல்வியாக மட்டுமே இருக்கும். இந்த புதிய கல்வி கொள்கை என்பது திருத்தப்பட்ட வேண்டியதல்ல, முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டிது என்றார்.  கருத்தரங்கிற்கு சங்கத்தின் திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் என்.தினேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் வசந்த் வரவேற்றார்.  இதில் மாநில தலைவர் ஏ.டி.கண்ணன், மத்திய குழு உறுப்பினர்கள் நிருபன், சத்யா, மாநில துணைச் செயலாளர் பிரகாஷ், தமுஎகச மாநில துணைத் தலைவர் சுந்தரவள்ளி, மாநில செயற்குழு உறுப்பினர் எம்.திவ்யபாரதி,  மாவட்ட துணைத் தலைவர் வசந்த், உட்பட பலர் பேசினர்

காவல்துறை மிரட்டலுக்கு கண்டனம்

கும்மிடிப்பூண்டி, கவரைப்பேட்டை, பொன்னேரி ஆகிய பகுதிகளில் கல்வி உதவி தொகை மற்றும் மடிக் கணினி கேட்டு போராட்டம் நடத்திவரும் மாணவர்களை கவரைப்பேட்டை தனிப் பிரிவு காவலர் பரந்தாமன், சிறையில் தள்ளுவேன் என மிரட்டி வருவதற்கு கூட்டத்தில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.