tamilnadu

img

வெள்ள நீரை வாங்கிக் கொள்ளாத வங்கக் கடல்

வங்கக் கடலில் உருவான மிக்ஜம் புயல் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்படுத்திவிட்டு ஆந்திராவின் நெல்லூருக்கு அருகே கரையைக் கடந்துள்ளது. இப்புயலால் சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார மாவட்டங்களில் டிசம்பர் 3 மற்றும் 4 தேதிகளில் பெய்த பெருமழையால் பல இடங்களில் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. சென்னையில் மக்களுக்கு பெரிய அளவில் இடரை ஏற்படுத்தி ஆந்திராவில் கரையை கடந்த  புயல், நெல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டா ரங்களிலும் சுமார் 10 லட்சம் ஏக்கரில் இருந்த நெற்பயிர்களை அழித்து உள்ளது.

இப்புயலின் தாக்கத்தால் சென்னையின் பல்வேறு இடங்களும் 3 மற்றும் 4 தேதிகளில் 24 மணி நேரத்தில் 30 செ.மீ. மழைப்பொழிவைப் பெற்றன. குறிப்பாக 30 மணி நேரத்தில் மீனம்பாக்கம் 38 செ.மீ,  நுங்கம்பாக்கம் 36 செ.மீ மழைப்பொழிவைப் பதிவு செய்தது. 3ஆம் தேதி காலை 8.30 மணி தொடங்கி 4ஆம் தேதி காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பெருங்குடியில் 29 செ.மீ., ஆவடியில் 28 செ.மீ.  மழைப்பொழிவும் 4ஆம் தேதி காலை 8.30 மணி தொடங்கி 5ஆம் தேதி காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பூந்தமல்லியில் 34 செ.மீ., ஆவடியில் 28 செ.மீ. மழைப்பொழிவும் பதிவானது.

உள்வாங்க மறுத்த கடல்

இந்த மழையும் சென்னையின் மேற்குப் பகுதியில் பெய்து கூவம், அடையாறு வழியாக வந்த மழைநீரும் சேர்ந்து நகரின் தாழ்வான பகுதிகளை வெள்ளக்காடாக்கின. புயலின் தாக்கத்தால் கடலில் ஏற்பட்ட சீற்றத்தின் காரணமாக உயர்ந்த கடல், ஆற்றில் வந்த தண்ணீரை உள் வாங்கிக்கொள்ளவில்லை. இதன் விளைவாகத்தான் தாம்பரம்,  முடிச்சூர், வேளச்சேரி, தரமணி, காரப்பாக்கம் சோழிங்கநல்லூர், திருவான்மியூர், பள்ளிக்கரணை, பெரும்பாக்கம் ஆகிய பகுதி களில் 2 நாட்களுக்கும் மேலாக நீர் வடிய வில்லை.

இன்றைய சென்னை நகரம் என்பது சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மீனவ கிராமமாகவும் பல பாக்கங்களாகவும், தாங்கல்களாகவும் இருந்து இன்றைய சென்னை மாநகரமாக மாறியுள்ளது. சென்னையின் வளர்ச்சி தமிழ் நாட்டின் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தியது உண்மைதான் என்றாலும், சுற்றுச்சூழலைப் பொறுத்தவரை அது ஒரு திட்டமிடப்படாத வளர்ச்சியாகவே இருந்தது. நகரில் இயற்கை யாகவே அமைந்திருந்த ஏரிகள், குளங்கள், கால்வாய்களின் அழிப்பே இப்பேரிடர் கால வெள்ளப் பாதிப்பிற்கு காரணம் என்பது  அனைவரும் அறிந்த உண்மை, நீர்நிலை களை அழித்து உருவானதுதான் இன்றைய சென்னை. 

காலநிலை ‘ஹாட் ஸ்பாட்’ சென்னை

தற்போது சென்னையில் ஒரு ச.கி.மீ. பரப்பில் 28,000 மக்கள் வாழ்கிறார்கள். திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்ட நியூயார்க் நகரத்தின் ஒரு ச.கி.மீ பரப்பில் வெறும் 11,000 பேர் மட்டுமே வாழ்கிறார்கள்.  2015ஆம்  ஆண்டில் பெருமழை மற்றும் வெள்ளம் கால நிலை மாற்றத்தின் தீவிர விளைவுகளை எதிர்கொள்ளும் வகையில் நமது நகரத்தைக் கட்டமைக்க வேண்டியது அவசியம் என்கிற பாடத்தைக் கற்றுக் கொடுத்தது. இதனைக் கருத்தில்கொண்டு தீவிர காலநிலை பேரிட ருக்குத் தயாராகும் வகையில் திட்டங்களை உருவாக்க வேண்டியது அவசியமாகிறது.

100 ஆண்டிற்கு ஒருமுறை வரும் அதி தீவிர பேரிடர்களெல்லாம் இனி ஆண்டுக்கு ஒருமுறை நடக்கக்கூடும் என காலநிலை மாற்றத்துக்கான நாடுகளுக்கிடையேயான குழுவான ‘IPCC’ எச்சரித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் இயங்கும் ‘Climate Studio’ வின் கணிப்புப்படி சென்னையின் வரு டாந்திர சராசரி மழைப்பொழிவு 20சதவீதம் அதிகரிக்கும், குறிப்பாக அதிதீவிர மழை நாட்கள் (6.5 cm+) இரண்டு மடங்கு அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 25 ஆண்டிற்கு ஒரு முறை வரக்கூடிய வெள்ளத்தால்   சென்னையின் 46சதவீதம் பகுதிகள் மூழ்கும் என சென்னை காலநிலை மாற்ற செயல்திட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

பல்வேறு ஆய்வறிக்கைகளும் வங்கக்  கடலில் உருவாகும் புயல்களின் தீவிரத் தன்மை அதிகரிப்பதையும், அரபிக்கடலில் உருவாகும் புயல்களின் எண்ணிக்கை அதிகரிப்பதையும் சுட்டிக் காட்டியுள்ளன. புவி வெப்பமயமாதலால் கடலின் மேற்பரப்பு வெப்பநிலை வட இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் அதிகரிப்பதே இதன் காரணம் என நிறுவப்பட்டுள்ளது.

இப்படிப் பல்வேறு ஆய்வுகளும் கால நிலை மாற்றத்தின் தாக்கம் சென்னையில் தீவிரமடையப் போவதை உறுதி செய்துள்ள நிலையில் சென்னை உள்ளிட்ட நகரங்களை யும் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு  உள்ளிட்ட மாவட்டங்களையும் புயல்களின் தாக்கத்திலிருந்து காப்பாற்ற தகவமைப்புத் திறனை அதிகரிக்க வேண்டும். இப்பகுதி களின் நிலப் பயன்பாட்டை மறு வரையறை செய்வது மிக மிக அவசியமாகும்.

(‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் இருந்து)

‘சூப்பர் எல் நினோ’
எல் நினோ, லா நினா என்பது பசிபிக் கடலில் இயற்கையாக ஏற்படக் கூடிய கால நிலை மாற்றம். இது உலகளாவிய வானிலையில் தாக்கத்தை ஏற்படுத்தும். பசிபிக் பெருங்கடலில் சராசரி வெப்ப நிலை  அளவு குறிப்பிட்ட காலத்திற்குள் அதிகரிப்பது எல் நினோ. அதாவது கடலில் வெப்பநிலை 0.8% அதிகரிக்கும் போது எல் நினோ உருவாகிறது. இந்த நிகழ்வு  சராசரியாக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எல் நினோவுக்கு எதிர்மறை யாக நடப்பது லா நினா. கடல் வெப்பநிலை வழக்கத்திற்கு மாறாக குறைந்து குளிர்ச்சியான நிலை உருவாகும். எல் நினோ முடிந்து லா நினா உருவாகும்.

இந்தாண்டு ‘சூப்பர் எல் நினோ’ நிகழ்வு நடைபெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. எல் நினோ 0.8% வெப்பநிலை ஆக இருந்தால் சூப்பர் எல் நினோ வின் போது 1.5 முதல் 2% வரை வெப்பநிலை உயரக் கூடும். இது மனிதர்களுக்கு மட்டுமல்ல; ஒட்டுமொத்த உயிரினங்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும். ‘சூப்பர் எல் நினோ’ தாக்கத்தால் உலகின் வெப்ப நிலை முதல் முறையாக 1.5 டிகிரி செல்சியஸ் உயரும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கொதிக்கும் வங்கக் கடல்
“கடல்கள் சூடாகவும், காற்று சாதகமாகவும் இருக்கும் வரை, சூறாவளிகள் நீண்ட நேரத்திற்கு அவற்றின் தீவிரத்தை தக்கவைத்துக்கொள்ளும்”

கடந்த பல பத்தாண்டுகளாக வங்காள விரிகுடா கடல் புவி வெப்பமயமாதலைச் சந்தித்து வருகிறது. வங்காள விரிகுடாவில் வெப்பநிலை 30-32 டிகிரி செல்சியஸ் வரை உள்ளது. இந்த உயர்ந்த வெப்ப நிலை, சூறாவளி, புயல்கள் தீவிரமடைவதில் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஏனெனில் அவை அதிக வெப்பச்சலனத்தை உட்செலுத்துகின்றன. இதனால் அரபிக் கடல் மற்றும் வங்காள விரிகுடாவில் இது போன்ற புயல்கள் அதிகமாக உருவாகின்றன.

இந்திய காலநிலையில் கல்வி நிறுவன விஞ்ஞானி டாக்டர் ராக்ஸி மேத்யூ கோல் கூறியதில் இருந்து...

 ‘வழக்கத்துக்கு மாறான பயணம்’

வங்கக் கடலில் உருவாகும் புயல்  குறிப்பிட்ட திசை யில் பயணித்து எங்கு கரை யை நெருங்குகிறதோ அங்கேயே கரையை கடக்கும்.

இந்த வழக்கத்துக்கு மாறாக, ‘மிக்ஜம்’ புயல் அந்தமான் அருகே உருவானாலும் சென்னை நெருங்கி கரையை கடக்காமல், வடக்கில் திரும்பி ஆந்திராவில் கரை கடந்தது.

பூமத்திய ரேகை அருகில் உரு வாகும் புயல்களின் வெளிச்சுற்றுப் பகுதி கடிகாரச் சுற்றுக்கு எதிர்த்திசையில் அதிவேகத்தில் சுற்றும். இது புயலின் மையப்பகுதி யில் இருந்து 300 கி.மீ. சுற்றளவுக்கு சூறாவளியாக வீசி கடுமையான தாக்கத்தை கடலிலும் நிலத்திலும் ஏற்படுத்தும்.

இதன்படியே மிக்ஜம் புயல் கரையைக் கடந்தாலும் கடலில் அதன் தாக்கம் ஓயவில்லை; கடல் தொடர்ந்து கொந்தளிப்பாக காணப்படுகிறது; 13 அடி உயரம் வரை ராட்சத அலைகள் எழுகின்றன. அதிக அலை எழும் நேரத்தில் நிலத்தில் இருந்து வரும் வெள்ளநீரை உள்வாங்குவதில் தாமதம் ஏற்படும். புயல் தாக்கம் காரணமாக கடலில் ராட்சத அலைகள் ஏற்படுவது ஒரு வாரம் நீடிக்கும்.

சென்னை அண்ணா பல்கலை.யின் காலநிலை மாற்றம் மற்றும் 
பேரிடர் மேலாண்மை துறை பேராசிரியர் ஏ.ராமச்சந்திரன் கூறியதிலிருந்து...