tamilnadu

புதிய தலைமைச் செயலர்  சண்முகம் பொறுப்பேற்றார்

 சென்னை,ஜூன் 30 தமிழ்நாடு அரசின் 46ஆவது தலைமைச் செயலாளராக, கே.சண்முகம் பொறுப்பேற்றுக் கொண்டார். தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக இருந்த கிரிஜா வைத்தியநாதனின் பதவிக்காலம் ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவு பெற்றது. இதையடுத்து, 2010ஆம் ஆண்டு முதல், திமுக, அதிமுக ஆட்சிகளில் தொடர்ந்து நிதித்துறை செயலாளராக இருந்த, கே.சண்முகம் புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். தமிழ்நாட்டின் 46ஆவது தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்ட சண்முகம், ஆளுநர் பன்வாரிலாலை, சனிக்கிழமை சந்தித்தார். இதனைத் தொடர்ந்து, பசுமைவழிச்சாலையில் உள்ள இல்லத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனி சாமியை ஞாயிற்றுக்கிழமைசந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பைத் தொடர்ந்து, சென்னை  தலைமைச் செயலகத்திற்கு வந்த கே.சண்முகம், தமிழ்நாடு அரசின் 46ஆவது தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். திங்கட்கிழமை முதல், சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடை பெற உள்ளதால், ஞாயிற்றுக்கிழமையே, தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.