tamilnadu

img

7.5% இட ஒதுக்கீட்டில் பி.இ மாணவர்களின் அனைத்து கட்டணங்களையும் அரசே ஏற்கும் 

தமிழகத்தில் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் பயிலும் மாணவர்களின் அனைத்து கட்டணங்களையும் அரசே ஏற்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் பயன் பெறும் மாணவர்களுக்கு சேர்க்கை ஆணை வழங்கும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு சேர்க்கை ஆணையை வழங்கினார்.
அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இட ஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணவர்களின் கல்வி கட்டணம், விடுதி கட்டணம், கலந்தாய்வு கட்டணம் ஆகிய அனைத்தையும் தமிழக அரசு ஏற்கும். அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5விழுக்காடு உள் ஒதுக்கீட்டில் பொறியியல் படிப்பில் இவ்வாண்டு 11,000 பேர் பயன்பெறுவார்கள். உயர்கல்வி, தொழிற்கல்வி, ஆராய்ச்சி கல்வியின் பொற்காலமாக இந்த ஆட்சி மாற வேண்டும். கால்நடை, சட்டம், வேளாண்மை படிப்புகளில் 300 மாணவர்கள் பயன்பெற உள்ளார்கள். 
பல குடும்பத்தின் கனவு நிறைவேறும் நாளாக இது அமைந்துள்ளது. கல்விச்செல்வம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பது அண்ணாவின் விருப்பம். அரசுப்பள்ளி மாணவர்கள் உயர்கல்வியில் நுழைய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்
 

;