சென்னை, செப். 28 - வள்ளீஸ்வரன் குடிசைமாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்புகளை இடித்துவிட்டு, அரசே கட்டிக் கொடுக்க வேண்டும் என்று அங்குள்ள மக்கள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திடம் வலியுறுத்தினர். வள்ளீஸ்வரன் தோட்டம் குடிசைமாற்று வாரிய குடியிருப்பு 1979-80 காலத்தில் கட்டப்பட்டவை. இங்களள் 488 வீடுகளும் மிகவும் பழுதடைந்துள்ளன. அவ்வப்போடு வீடுகளின் தளம், படிகட்டுகள், கைபிடி சுவர்கள், சன்ஷேடுகள் இடிந்து விழுந்து விபத்துக்கள் நிகழ்ந்து கொண்டுள்ளன. புதிய வீடுகளை கட்டித் தரக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அமைப்புகள் தொடர் போராட்டம் நடத்தி வந்தன. இதன் தொடர்ச்சியாக வீடுகளை இடித்துவிட்டு 400 சதுர அடி பரப்பில் வீடுகளை கட்ட 70 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியது. இதற்கு பயனாளிகள் பங்களிப்பாக சுமார் 5 லட்சம் வரை அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டது. இதற்கு குடியிருப்புவாசிகள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். இந்நிலையில் வெள்ளியன்று (செப். 27)துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அப்பகுதியை ஆய்வு செய்தார். அப்போது மக்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், ஓராண்டுக்குள் வீடுகள் முழுமையாக இடித்துவிட்டு கட்டித்தரப்படும். வாடகை வீட்டில் தங்குவதற்கு மாதம் 8 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். பங்களிப்பு தொகையாக ஒன்றரை லட்சம் ரூபாய் வழங்க வேண்டி வரும் என்றார். வீடுகளை காலி செய்ய ஏப்ரல் மாதம் வரை காலஅவகாசம் அளிக்க வேண்டும், பயனாளிகளிடம் பணம் வசூலிக்காமல் கட்டிக் கொடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்தனர்.