தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வந்ததும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கண்டிப்பாக நடைபெறும் என்று மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு செங்கோட்டையன் உறுதிபட தெரிவித்துள்ளார்.
இன்று அவர் சென்னையில் கல்வித்துறை அலுவலர்களுடன் வரும் கல்வி ஆண்டுக்கான நடைமுறைகள் பற்றி ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் திரு செங்கோட்டையன் வரும் 3ம் தேதி ஊரடங்கு நிறைவுக்கு வந்தபின்னர் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்படும் என்றார். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண்கள் மாணவர்களின் வாழ்வில் ஒரு முக்கியமான அம்சம் என்பதால் இத்தேர்வு நடை பெறுவது அவசியம் என்று அவர் குறிப்பிட்டார். ஒருநாள் விட்டு ஒருநள் தேர்வை நடத்தி முடிப்பது பற்றி ஆலோசிக்கப் படுவதாகவும் தேர்வு எழுதும் மாணவர்கள் ஒருவருக்கு ஒருவர் போதிய இடைவெளி விட்டு அமர்ந்து எழுதுவார்கள் என்றும், ஏற்கனவே அவ்வாறு இடைவெளி விட்டு அமர்ந்து எழுதுவது வாடிக்கையாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். கடந்த மார்ச் 23-ம் தேதி பிளஸ்-2 மாணவர்களில் சுமார் 34 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இறுதிநாள் தேர்வை எழுத முடியாமல் போனது பற்றி கேட்டதற்கு, அவர்களுக்கு ஏற்கனவே முதலமைச்சர் அறிவித்தபடி மற்றொரு வாய்ப்பு அளிக்கப்படும் என்றார்.
ப்ளஸ் டூ விடைத்தாள் திருத்தும் பணியும் மே மூன்றாம் தேதிக்கு பிறகு நடைபெறும் என்று அவர் மேலும் கூறினார்.
ஒவ்வொரு தாளுக்கும் மாணவர்கள் சில மணிநேரம் மட்டுமே தேர்வு எழுதுவதால் கோடை வெயில் ஒரு தடையாக இருக்காது என்று அவர் கருத்து தெரிவித்தார்.