tamilnadu

img

திண்டுக்கல் சீனிவாசன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் வலியுறுத்தல்

திண்டுக்கல் சீனிவாசன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ்  வழக்கு பதிவு செய்ய வேண்டும் என தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.இதுகுறித்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழக அரசின் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்  வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள வளர்ப்பு யானை புத்துணர்வு முகாம் துவக்க நிகழ்ச்சிக்காக நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் சரணாலயத்துக்கு வருகை தந்திருந்தார். அவருடன் மாவட்ட ஆட்சியர் அவர்களும், ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினரும், வனத்துறை உயர் அதிகாரிகள் வருகை தந்திருந்தனர். அப்போது முதுமலை தெப்பக்காடு பகுதியில் அமைந்துள்ள வளர்ப்பு யானைகளுக்கு உணவு அளிக்கப்படும் இடத்திற்கு வந்த அமைச்சர், அங்கு நின்று கொண்டிருந்த பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த பள்ளி மாணவனை " டேய் இங்க வாடா" என மரியாதைக்குறைவாக அழைத்ததோடு மட்டுமின்றி, தனது காலில் இருந்த செருப்பை கழட்டச் சொல்லி அதட்டும் தொனியில் பேசியுள்ளார். அரசு அதிகாரிகள் , பொதுமக்கள் , அம்மாணவனின் பெற்றோர் என அனைத்துத் தரப்பு மக்களும் கூடியிருந்த ஒரு பொது இடத்தில், தனது பொறுப்பிற்கு சற்றும் பொருத்தமில்லாத வகையிலும், மிகவும் கண்ணியக் குறைவாகவும், ஆணவத்தோடு நடந்து கொண்ட தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்  மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் உரிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்திட மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். மேலும் பழங்குடி மாணவனிடம் அருவருக்கத் தக்க வகையில் நடந்து கொண்ட அமைச்சர் உடனடியாக பகிரங்க மன்னிப்பையும் கோர வேண்டுமென தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் நீலகிரி மாவட்ட குழு வின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பழங்குடி மக்களை திரட்டி நாளை (7 2 2020) காலை 10.30 மணிக்கு உதகை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தின் முன் பெருந்திரள் முறையீடு இயக்கத்தை நடத்துவது எனவும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் முடிவு செய்திருக்கிறோம். இவ்வியக்கத்தில் பழங்குடி மக்களும் அனைத்து தரப்பு மக்களும் பெரும் திரளாக பங்கேற்று இவ்வியக்கத்தை வெற்றிபெறச் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம்.