சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நியாயவிலைக்கடையில், பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1000-த்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
தைப் பொங்கல் திருநாளை மக்கள் அனைவரும் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், அனைத்து குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழுக் கரும்பு மற்றும் ரூ.1,000- வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தார்.
அதன்படி, பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1,000 வழங்கிடும் பணியின் தொடக்கமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னை, ஆழ்வார்பேட்டை டி.யூ.சி.எஸ் நியாய விலைக் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கினார்.
இப்பொங்கல் பரிசினை பெற்றிட அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அதிக எண்ணிக்கையில் நியாய விலைக் கடைகளுக்கு ஒரே நேரத்தில் வருவதைத் தவிர்த்திட, நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டு டோக்கன் வழங்கப்பட்டுள்ளது.
அதில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் அக்குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசினை பெற்றுக் கொள்ளக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.