தமிழ்நாடு அரசின் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை சிபிஎம் வரவேற்றுள்ளது.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அளித்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
இன்றைய சமுதாய உற்பத்தி முறையில், பெண்களின் வீடு சார்ந்த உழைப்பு பெரும் பங்கு செலுத்துகிறது. விவசாயமாக இருந்தாலும், தொழிலாக இருந்தாலும் அதற்கு தேவையான மனித வளத்தை உருவாக்குவதும், வளர்த்தெடுப்பதும், பராமரிப்பதும் பெண்களின் பணியாகவே உள்ளது. ஆனால், அதன் மதிப்பு பொருளாதாரத்தில் கணக்கிடப்படுவதில்லை. பெண்களை, வீட்டு உழைப்பில் இருந்து விடுவிக்க வேண்டும் என்ற முயற்சியை முதன் முதலில் முன்னெடுத்தது சோசலிச அரசாங்கமே. அவ்வாறு வீட்டு உழைப்பில் இருந்து பெண்களை விடுவிக்க முடியாதபோது, வீடுசார் உழைப்பிற்கு ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானது. அண்மையில் ஐக்கிய நாடுகள் சபையும் இதனை தொடர்ந்து பேசி வருகிறது. ஆனாலும், உலகம் முழுவதும் அரசாங்கங்கள் இதனை ஏற்று நடவடிக்கைகள் எடுப்பது குறைவே.
இந்த சூழலில், திமுகவின் தேர்தல் வாக்குறுதியான ‘மகளிர் உரிமைத்தொகை திட்டம்’ நாளை முதல் அமலுக்கு வருகிறது. முன்னோட்டமாக இன்றே பல மகளிருக்கு அவர்களுடைய வங்கிக் கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் ஒரு கோடிக்கும் அதிகமான குடும்பங்கள், ஆண்டுக்கு ரூ.12,000 என்ற அளவில் பெற்று பலனடையும் இந்த திட்டத்தை சிபிஎம் மாநில செயற்குழு பாராட்டி வரவேற்கிறது.
இந்த திட்டத்திற்காக விண்ணப்பித்தும் உரிமைத் தொகை கிடைக்காமல் விடுபட்டுள்ள மகளிர் மேல் முறையீடு செய்யலாம் என அறிவித்திருப்பது நல்ல அம்சமாகும். மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை பெறுவோர் குடும்பத்தில் உள்ள பெண்களுக்கும் உரிமைத் தொகை வழங்க வேண்டுமென்ற சிபிஐ (எம்) கோரிக்கையை அரசு ஏற்றுக் கொண்டுள்ளதைப் போல் மேலும் விடுபட்டுள்ளவர்களுக்கும் உரிமைத் தொகை வழங்கிடும் வகையில் சில நிபந்தனைகளை தளர்த்திட அரசு பரிசீலிக்க வேண்டுமென சிபிஎம் மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.