அரசியல் சாசனத்திற்கு விரோதமாக செயல்படும் ஆளுநரை பதவி நீக்கம் செய்ய உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்குத் தொடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து சென்னையில் மே 9, 10 ஆகிய தேதிகளில் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.நூர்முகமது தலைமையில் நடைபெற்ற கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:
தமிழகத்தில் பொறுப்பேற்றுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து அரசியல் சாசனத்திற்கு விரோதமாகவும், ஆளுநருக்கு வகுத்து அளிக்கப்பட்டுள்ள விதிகளுக்கு முரணாகவும் செயல்பட்டு வருகிறார். இதுகுறித்து ஏற்கனவே எண்ணற்ற புகார்கள் எழுந்துள்ளன. ஒன்றிய அரசுக்கு ஆளுநருக்கு உரிய அறிவுரைகள் வழங்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர்களின் மனுவும், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமும் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஆளுநர் தனது போக்கினை மாற்றிக் கொள்ளவில்லை. மாறாக, இரண்டாண்டு சம்பவங்களை எல்லாம் தொகுத்து கடந்த மே 4 அன்று ஒரு ஆங்கில நாளேட்டிற்கு ஆளுநர் ஆர்.என். ரவி பேட்டி என்கிற பெயரில் உண்மைக்கு மாறானவைகளையும், அவதூறுகளையும் தெரிவித்துள்ளார். வழக்கம்போலவே தனது வரம்பை மீறி அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு தமிழகத்தின் மீதும், தமிழ்நாடு அரசின் மீதும், தமிழ்நாட்டு மக்கள் மீதும் அவதூறுகளை அள்ளிப்பொழிந்துள்ளார். குற்றச்செயல்கள் நடப்பதால் சட்டம் - ஒழுங்கு கெட்டுவிட்டதாக சொல்லும் முன்னாள் ஐ.பி.எஸ்.அதிகாரியான ஆளுநர் சட்டம் - ஒழுங்கு அல்லது அமைதி என்பது தனிப்பட்ட சம்பவங்கள் என்று பொருள் கொள்ளாது என்பதை அறியாதவர் அல்ல. குற்றங்களை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமலிருந்தாலோ, குற்றவாளிகளின் மீது நடவடிக்கை எடுக்காமலிருந்தாலோ அல்லது ஒரே மாதிரியான குற்றங்கள் தொடர் நிகழ்வாக இருந்தாலோ அவை தீவிரமான குற்றங்களாக இருந்தாலோ மட்டுமே சட்டம் - ஒழுங்கு கெட்டு விட்டது என்று சொல்வதற்கு வாய்ப்பிருக்கிறது. அதைவிடுத்து சில சம்பவங்களை வைத்துக் கொண்டு மனம்போன போக்கில் தமிழ்நாடு அமைதியற்ற மாநிலம் என ஆளுநர் குறிப்பிடுவது தமிழ்நாட்டு மக்களை இழிவுபடுத்துவதாகும்.