tamilnadu

img

கல்லூரி மாணவி கொலை - குற்றவாளி மீதான குண்டர் சட்டம் ரத்து!

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சத்யா கொலை வழக்கில் குற்றவாளி மீதான குண்டர் சட்டம் ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில், கல்லூரி மாணவி சத்ய பிரியா, சதீஷ் என்ற இளைஞரிடம் நின்று பேசிக்கொண்டு இருந்தபோது இருவருக்கும் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், ரயில் நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த மின்சார ரயிலில் மாணவியை தள்ளிவிட்டு தப்பி ஓடினார். இதில் மாணவி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதை அடுத்து, சதீஷை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி விசாரணையின்போது பரிந்துரைக்கப்பட்டதன் அடிப்படையில் அவரை குண்டர் சட்டத்தில் அடைக்க சென்னை மாநகர காவல்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். 
இதைத் தொடர்ந்து தன்னை சட்டவிரோதமாகவும், அடிப்படை உரிமையை மீறியும் குண்டர் சட்டத்தில் கைது செய்திருப்பதாக சதீஷ் தரப்பில் கடந்த நவம்பர் மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணை இன்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் முன்பு வந்தது.
அப்போது, கைது செய்தது தொடர்பான குறிப்பு ஆணையில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உள்ள தகவல்களில் முரண்பாடு காணப்பட்டது. இதுதொடர்பாக காவல்துறையினர் போதிய விளக்கம் அளிக்காததால் சதீஷ் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாணவி சத்ய பிரியா கொலையை அடுத்து, அவரது தந்தையும் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார். காவல்துறையில் பணியாற்றும் தாயும் சமீபத்தில் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.