திருவள்ளூர், ஜூலை 11- திருவள்ளூரை அடுத்த நரசிங்கபுரம் கிராமத்தில் கடந்த சில நாட்களாக குடிநீர் சரிவர விநியோகிக்கப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதியடைந்தனர். மேலும் குடிநீரை பணம் கொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த பொது மக்கள் பூந்தமல்லி- தக்கோலம் சாலையில் நரசிங்கபுரம் பேருந்து நிலையம் அருகே காலிக்குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் மப்பேடு காவல்துறையினர் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். பொதுமக்களின் இந்த திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.