tamilnadu

img

டி.பி.ஜெயின் கல்லூரியை அரசு கையகப்படுத்த வலியுறுத்தி போராட்டம்

சென்னை துரைப்பாக்கதில் உள்ள டி.பி.ஜெயின் அரசு உதவி பெறும் கல்லூரி செயல்பட்டு வருகிறது. அதே வளாகத்தில் சுயநிதி கல்லூரியும் இயங்கி வருகிறது.

அரசு உதவி பெறும் கல்லூரியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கல்லூரி நிர்வாகம் மாணவர் சேர்க்கையை நடத்தாமல் உள்ளது. அதேசமயம் சுயநிதி பாடப்பிரிவுகளில் மட்டும் மாணவர் சேர்க்கையை நடத்தி வருகிறது.

இதனால் சட்டத்திற்கு எதிராக செயல்படும் கல்லூரியை கையகப்படுத்த வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் உயர்கல்வித்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி இருந்தார்.

இந்த நிலையில்  கல்லூரியை அரசு கையகப்படுத்த வலியுறுத்தி திங்களன்று (ஜூன் 27) அந்த கல்லூரி வாயில் அருகே இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் பல்வேறு அமைப்புகள் இணைந்து போராட்டம் நடத்தின.

இந்திய மாணவர் சங்கத்தின் தென்சென்னை மாவட்ட செயலாளர் ஆர்.பாரதி தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் சோழிங்கநல்லூர் தொகுதி குடியிருப்போர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் டி.ராமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், சிஐடியு தலைவர் விஜயகுமார், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் தீ.சந்துரு  உள்ளிட்டோர் கலந்து கொண்டு  பேசினர்