tamilnadu

குடிநீர் கேட்டு சாலை மறியல்

திருத்தணி, ஏப். 4-


திருத்தணியை அடுத்த வேலஞ்சேரி கிராமத்தில் 350க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கடந்த ஒரு வாரமாக அந்த பகுதிக்கு குடிநீர் வழங்காததால் மக்கள் கடும் அவதிப்பட்டனர். இதுகுறித்து திருத்தணி ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதி மக்கள் குடிநீர் கேட்டு திருத்தணி - நாகலாபுரம் சாலையில் காலிகுடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருத்தணி காவல் துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.அதேபோல் திருத்தணி அடுத்த தாழவேடு காலனியில் மாரியம்மன் கோவில் தெரு, கண்ணபிரான் தெரு, அம்பேத்கார் தெருக்களில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் வழங்காததை கண்டித்து அந்த பகுதி மக்கள் திருத்தணி நாகலாபுரம் சாலையில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருத்தணி காவல் துறையினர், திருவாலங்காடு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும்கலைந்து சென்றனர்.

;