tamilnadu

img

இலங்கை கடற்படை அட்டூழியம்: ரோந்து கப்பல் மோதி தமிழக மீனவர் பலி- சிபிஎம் கடும் கண்டனம்

தமிழக மீனவர்களின் படகு மீது இலங்கைக் கடற்படை கப்பல் மோதி தாக்கியதில், படகு கவிழ்ந்து இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர் உயிரிழந்த விவகாரத்தில்,கொலை வழக்கு பதிந்து ரூ.1 கோடி இழப்பீடு பெற்று தர ஒன்றிய அரசை சிபிஎம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது,

வங்கக்கடலில் நெடுந்தீவு அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களின் படகு மீது இலங்கைக் கடற்படை கப்பல் மோதி தாக்கியதில், படகு கவிழ்ந்து அதில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மலைச்சாமி என்ற மீனவர் உயிரிழந்திருக்கிறார்.

கடலில் தத்தளித்த மூன்று மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். கடலில் மூழ்கி உயிரிழந்த மீனவர் குடும்பத்துக்கு சி.பி.ஐ(எம்) சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு தொடர்ந்து அச்சுருத்தலாக இருந்துவரும் இலங்கை கடற்படைக்கு, இந்திய அரசின் கண்டனம்‌ மட்டுமே போதுமானதல்ல.

கடந்த 2012 ஆம் ஆண்டு இந்திய மீனவர்கள் இத்தாலி கடற்படையால் சுடப்பட்ட போது இந்தியாவில் கொலை வழக்கு தொடரப்பட்டது. மீனவர்களுக்கு ரூ.10 கோடி அபராதமாக வசூலித்து வழங்கப்பட்டது. எனவே இந்த வழக்கையும் அதே போல கொலை வழக்காக பதிவதுடன், உயிரிழந்த மீனவர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி  நிவாரணம்‌ பெற்றுத்தர  வேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.