சென்னை, பிப்.13- அரியலூர் மாவட்டம் மணக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்குடிமகன் (34). ஆட்டோ ஒட்டுநர்.இவர் சென்னை யில் தங்கி ஆட்டோ ஓட்டி வந்தார். இந்நிலையில் புதனன்று தமிழ்குடிமகன் பாரிமுனையில் இருந்து தரமணி ஸ்ரீராம் நகருக்கு சவாரிக்காக சென்றார். அப்போது பெட்ரோல் இல்லாமல் ஆட்டோ நடுவழியில் நின்றது. இதனால் ஆட்டோவை அங்கேயே நிறுத்தி விட்டு அருகில் உள்ள பெட்ரோல் நிலையத்துக்கு சென்று ஒரு பாட்டிலில் பெட்ரோல் வாங்கி வந்தார். பின்னர் அதை ஆட்டோவில் ஊற்றினார். அப்போது அவர் சிகரெட்டும் புகைத்துக் கொண்டிருந்தாக கூறப்படுகிறது. எதிர்பாராத விதமாக சிகரெட்டில் இருந்த தீ பாட்டில் மீது விழுந்தது. இதில் பெட்ரோல் தீப்பிடித்து எரிந்தது. இதில் பதட்டம் அடைந்தஅவர் பெட்ரோலை கீழே ஊற்ற முயன்றார். அப்போது பெட்ரோல் அவரது உடலில் சிதறி தீப்பிடித்தது. உடனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தீயை அனைத்து தமிழ்குடிமகனை ராயபுரம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நள்ளிரவு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கோட்டூர்புரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.