‘நீட்’ தேர்விலிருந்து விலக்கு கோரி தமிழக அரசு அனுப்பிய மசோதாவை உடனடியாக குடியரசு தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைக்க கோரி புதனன்று (மார்ச் 9) சென்னையில் மாணவர்கள் 48 மணி நேர உண்ணாநிலைப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
திமுக தலைமையிலான அரசு நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் மசோதாவை ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. 150 நாட்களுக்கு பிறகு அந்த மசோதாவை ஆளுநர் அரசுக்கே திருப்பி அனுப்பினார். இதனையடுத்து தமிழக சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தில் மீண்டும் ஒருமனதாக சட்டம் நிறைவேற்றப்பட்டது. அந்த மசோதா கடந்த பிப்.8ந் தேதி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அரசு அனுப்பிய சட்டமசோதா மீது எந்த ஒரு முடிவும் எடுக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. எனவே, மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும். தமிழகத்தில் பொதுத் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு மாதமாகியும் மசோதா மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஆளுநர் மாளிகை தெரிவிக்காமல் உள்ளது.
இந்த நிலையில், ‘நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும், நீட் விலக்கு மசோதாவை உடனடியாக குடியரசு தலைவருக்கு ஆளுநர் அனுப்ப வேண்டும்’ என வலியுறுத்தி புதனன்று (மார்ச் 9) இந்தப் போராட்டம் தொடங்கியது.
இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் நடைபெறும் இந்த போராட்டத்தில் கே.பாலகிருஷ்ணன் பேசியது வருமாறு:
மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வாக மட்டும் ‘நீட்’ இல்லை. பொறியியல் உள்ளிட்ட அனைத்து படிப்புக்கும் கொண்டு வர உள்ளனர். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் மருத்துவ கனவை தடை செய்யும் வகையில் நீட் தேர்வு உள்ளது.
ஆர்எஸ்எஸ் வழிகாட்டல்படி ஒன்றிய அரசு நீட் தேர்வை அமல்படுத்துகிறது. ஒன்றிய அரசின் எடுபிடிகளாக ஆளுநர்கள் செயல்படுகிறார்கள்; அரசியலமைப்புச் சட்டத்திற்கு மாறாக, எல்லை மீறி நடக்கின்றனர். அரசமைப்பு சட்டத்தை மீறி நடக்கும் ஆளுநர்கள் மீது வழக்கு தொடுக்கும் நிலை உருவாகும்.
தமிழக மருத்துவக்கல்வி இடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு வழங்கப்படுகிறது. அதில் 27 விழுக்காடு இடஒதுக்கீட்டை ஒன்றிய அரசு அமல்படுத்தாமல் உள்ளது. அதை எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சி, திமுக உள்ளிட்ட கட்சிகள் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றன.
விவசாயிகளின் எழுச்சிமிக்க போராட்டத்தால் 3 வேளாண் சட்டங்களை ஒன்றிய அரசு திரும்ப பெற்றது. அதேபோன்ற நிலை நீட் தேர்வு விவகாரத்திலும் உருவாகும். கோவிட் காலம் என்பதால் கல்வி நிலையங்கள் செயல்படாமல் இருந்தன. தற்போது இந்திய மாணவர் சங்கத்தினர் தொடங்கியுள்ள உண்ணாநிலைப் போராட்டம், 1960களில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தைபோன்று அடுத்தடுத்து வெடிக்கும். அதற்கு கால்கோள் நிகழ்வாக அமைந்துள்ளது.
நீட் தேர்விலிருந்து சற்று ஆறுதல் தரும் வகையில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு 7.5 உள்ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதை கேள்விக்குள்ளாக்கி வருகின்றனர். ஒருவேளை சென்னை உயர்நீதிமன்றம் அந்த சட்டத்தை அங்கீகரித்தாலும், உச்சநீதிமன்றம் எவ்வாறு அணுகும் என்பது தெரியாது. இந்த இடஒதுக்கீட்டிற்கு ஒன்றிய அரசு எதிர்ப்பு தெரிவித்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.
ஆகவே, மாணவர்களுக்கு ஆதரவாக மக்களும், அரசியல் கட்சிகளும், தமிழக அரசும் உள்ளது. மாணவர்கள் கிளர்ச்சியில் ஈடுபட வேண்டும். விவசாயிகளிடம் மண்டியிட்டதுபோல், மாணவர்களிடமும் பிரதமர் மண்டியிடும் சூழல் உருவாகும். நீட் தேர்விலிருந்து கர்நாடகம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களும் விலக்கு கோரும் நிலை உருவாகி உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
சூது, சூழ்ச்சி, சதி...
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளன் பேசுகையில், “எளியவர்கள் கல்வி மூலம் வலிமை பெறக் கூடாது என்று சனாதன சக்திகள் நீட் தேர்வை கொண்டு வந்துள்ளன. இந்து ராஷ்டிரமாக இந்தியாவை அறிவிக்க தமிழகம், கேரளம் தடையாக உள்ளது. எனவே, கல்வி வாயிலாக அதை செய்யப் பார்க்கிறார்கள்.
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை நிர்பந்தப்படுத்தி தமிழக பள்ளிகளை ஏற்க வைத்து, அதன்மூலம் இந்தியை திணித்து, சமஸ்கிருதமயாக்க முயற்சிக்கின்றனர். சமூக நீதி அரசியலின் மையமாக தமிழகம் உள்ளது. அனைத்து கட்சிகளும் ஒன்று திரண்டு நீட் தேர்வை எதிர்க்கின்றன. சனாதன சக்திகளின் சூது, சூழ்ச்சி, சதியை முறியடிக்க வேண்டும். சங்பரிவாரத்தை ஆட்சி அதிகாரத்திலிருந்து அகற்ற வேண்டும்.
எனவே, நீட் தேர்வை எதிர்த்த போராட்டம், சனதான சக்திகளை எதிர்த்தும், அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்கவும் நடைபெறும் போராட்டம். தற்போதுள்ள நிலையில் நீட் மசோதாவை ஆளுநர் மாநில அரசுக்கு திருப்பி அனுப்ப முடியாது. எனவே, குடியரசு தலைவருக்கு காலம் கடத்தாமல் அனுப்ப வேண்டும்” என்றார்.
நுழைவு தேர்வே கூடாது
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா தமது உரையில், “நீட் தேர்வுக்கு பிறகு மாநில பாடத்திட்டத்தில் பயின்று மருத்துவ படிப்பில் சேருவோர் விகிதம் 98.2லிருந்து 59 விழுக்காடாக குறைந்துள்ளது. தமிழ்வழியில் பயில்வோர் 14.8லிருந்து 2 விழுக்காடாக குறைந்துள்ளது. தற்போது 7.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. தீட்டு என்று ஒதுக்கி வைத்தவர்கள், இன்றைக்கு நீட் என்ற பெயரில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களை ஒதுக்கி வைக்கின்றனர். நுழைவு தேர்வுகள் தேவையற்றவை. எனவே, அவற்றை முழுமையாக ஒழிக்க வேண்டும்” என்றார்.
போராட்டம் வெல்லும்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் குறிப்பிடுகையில், “ஆளுநரின் தவறுதலுக்கு மாணவர்கள் தங்களை வறுத்திக் கொண்டு போராடுகிறார்கள். ஆளுநர் மக்களின் ஊழியர் என்பதை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். அரசியலமைப்புச் சட்டத்தையும், சட்டமன்ற இறையாண்மையையும் பாதுகாக்க நடைபெறம் போராட்டம் வெல்லும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.
நன்கொடை...
பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு குறிப்பிடுகையில், நீட் தேர்வை எதிர்த்த போராட்டம் அரசியலமைப்பு சட்டம், கூட்டாட்சி தத்துவம், நாடாளுமன்ற ஜனநாயகத்தை பாதுகாக்கும் போராட்டம். கோச்சிங் சென்டர்களில் படித்தால்தான் தேர்ச்சி பெற முடியும் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. அரசு நடத்தும் பொதுத் தேர்வை ஏற்றுக் கொள்ளாத ஒன்றிய அரசு, ஏஜென்சிகள் நடத்தும் நுழைவுத் தேர்வை ஏற்கிறது. கோச்சிங் சென்டர்களிடம் இருந்து அரசுக்கு 18 விழுக்காடு ஜிஎஸ்டியும், பாஜகவிற்கு நன்கொடையும் கிடைக்கிறது. அதனால் நீட் தேர்வை உறுதியாக அமல்படுத்துகிறார்கள்” என்றார்.
25 மாணவர்கள் உயிரிழப்பு
மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் வீ.மாரியப்பன் பேசுகையில், “நீட் தேர்வினால் தமிழகத்தில் மட்டும் 25 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். நீட் தேர்வால் படிக்க முடியாமல் உக்ரைன் சென்ற மாணவரும் கொல்லப்பட்டுள்ளார். மாநில உரிமைகளை பறிக்கும் வகையிலும் நீட் தேர்வு உள்ளது. எனவே, நீட் தேர்விலிருந்து விலக்கு கோரி தமிழக அரசு அனுப்பிய மசோதாவை ஒரு மாதமாகியும் ஆளுநர் குடியரசு தலைவருக்கு அனுப்பாமல் உள்ளார். ஆளுநரின் அராஜகத்தை கண்டித்து உண்ணாநிலைப் போராட்டம் நடைபெறுகிறது என்றார்.
இந்தப் போராட்டத்திற்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.டி.கண்ணன் தலைமை தாங்கினார். காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ, சவிதா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் ஜவஹர் நேசன், மாணவர் சங்க துணைத்தலைவர்கள் ம.கண்ணன், க.நிருபன் சக்கரவர்த்தி, துணைச் செயலாளர்கள் ஆறுபிரகாஷ், ஜி.அரவிந்தசாமி, மத்தியக்குழு உறுப்பினர்கள் ரா.ஜான்சிராணி, மு.சத்தியாராம், மாவட்டச் செயலாளர்கள் லோ.விக்னேஷ்வரன் (மத்தியசென்னை), ரா.பாரதி (தென்சென்னை), மு.நித்திஷ்குமார் (வடசென்னை) உள்ளிட்டோர் பேசினர்.