tamilnadu

img

செந்தில் பாலாஜி இலாகாக்களை வேறு அமைச்சர்களுக்கு மாற்ற ஆளுநர் ஒப்புதல்

அமைச்சர் செந்தில் பாலாஜி இலாகாக்களை வேறு அமைச்சர்களுக்கு மாற்ற தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார். 

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு, 17 மணிநேர சித்ரவதையால் உடல்நலக்குறைவுக்கு உள்ளான அமைச்சர் செந்தில் பாலாஜி, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். இதற்கிடையில், மருத்துவமனையில் விசாரணை மேற்கொண்ட சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜியை ஜூன் 28-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் அனுமதியுடன் செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சூழலில், அமைச்சர் செந்தில் பாலாஜி வகித்து வந்த துறைகளை வேறு அமைச்சர்களுக்கு மாற்றம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு கூடுதலாக மின்சாரத்துறையும், வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமிக்கு கூடுதலாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறையும் வழங்கவும், இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என்றும் தமிழ்நாடு ஆளுநருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை செய்தார்.

இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி இலாகாக்களை வேறு அமைச்சர்களுக்கு மாற்ற தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார். இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என்ற பரிந்துரையை ஏற்க ஆளுநர் மறுப்பு தெரிவித்துள்ளார்.