tamilnadu

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ‘சரவணபவன்’ ராஜகோபால் காலமானார்

 சென்னை, ஜூலை 18- கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சரவணபவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சரவணபவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபால் உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து கடந்த 9 ஆம் தேதி நீதிபதியின் முன் ஆஜராகினார்.  உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததால் தனியார் மருத்துவமனையில் இருந்து நீதிமன்றத்திற்கு ஆம்புலன்ஸ் மூலமாக ராஜகோபால் கொண்டுவரப்பட்டார். நீதிபதி அவரை புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். ஆனால் சிறைக்கு செல்லும் போதே அவருடைய உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டது. அதனால், ஸ்டான்லி மருத்துவமனை யில் சிறை கைதிகளுக்கான வார்டில் ராஜகோபால் அனுமதிக்கப்பட்டார். உடல்நிலை மோசமானதால் தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டு, மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனிடையே ராஜகோபாலை தனியார் மருத்துவமனைக்கு மாற்றி சிகிச்சை தர சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது.  இதையடுத்து, வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக ராஜகோபால் கடந்த 16 ஆம் தேதி மாற்றப்பட்டார். இந்த நிலையில் வியாழனன்று சிகிச்சை பலனின்றி ராஜ கோபால் உயிரிழந்தார்.