சென்னை, மார்ச் 6 - சனாதனம் குறித்த பேச்சு விவகாரத்தில் அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு ஆகியோரை பதவிநீக்கம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி சென்னை யில் தமுஎகச நடத்திய சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு ஆகியோர் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசினர்.
இதே கருத்தை திமுக எம்.பி. ஆ.ராசாவும் முன்வைத்து பேசி வருவதால் எந்த தகுதியின் அடிப்படையில் இவர்கள் பதவியில் நீடிக்கிறார்கள் என விளக்கமளிக்க உத்தரவிடக் கோரி இந்து முன்னணி சார்பில் உயர்நீதிமன்றத்தில் ‘கோ வாரண்டோ’ வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. 9 நாட்கள் நடந்த விசாரணைக்கு பிறகு, நவம்பர் 23ம் தேதி வழக்கின் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கில் மார்ச் 6 புதனன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி அனிதா சுமந்த், மனுதாரர்கள் கோரிய எந்த நிவார ணமும் வழங்க முடியாது என கூறி வழக்கை முடித்து வைத்தார். இந்து சமய அறநிலை யத்துறை அமைச்சர் சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்டதன் மூலம் மட்டுமே அதற்கு ஒப்புதல் அளித்ததாக கருத முடியாது என்று கூறியுள்ள நீதிபதி, வழக்குகளில் தண்டிக்கப் பட்டால் மட்டுமே மக்கள் பிரதிநிதிகளை தகுதி நீக்கம் செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளார்.
சனாதன பேச்சு தொடர்பாக அமைச்சர் உதயநிதிக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் வழக்குகள் நிலுவையில் இருந்தாலும் அந்த வழக்குகளில் தண்டனை ஏதும் விதிக்கப்படாத நிலையில், எந்த அடிப்படையில் பதவியில் நீடிக்கிறார் என விளக்கமளிக்கும்படி உத்தரவிட முடியாது என்றும் நீதிபதி அனிதா சுமந்த் தெரிவித்துள்ளார்.