ஆதனின் பொம்மை நாவலின் மூலம் சிறார் உள்ளங்களில் கீழடி பற்றிய சிந்தனைகளை விதைத்த உதயசங்கர் பால புரஸ்கார் விருது பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அதே போல திருக்கார்த்தியல் என்ற நூலை எழுதிய ராம் தங்கம் யுவபுரஸ்கார் விருது பெற்றிருக்கிறார். இருவருக்கும் வாழ்த்துகள்.
நாகர்கோவிலைச் சேர்ந்த எழுத்தாளர் ராம் தங்கம் தனது சிறுகதைத் தொகுப்பிற்காக சுஜாதா விருது, அசோகமித்திரன் விருது, படைப்பு இலக்கிய விருது உட்பட தன் படைப்புகளுக்காக பல விருதுகளை பெற்றுள்ளார். தற்போது அவரது நூலுக்கு யுவ புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது இலக்கிய தளத்தில் வலம் மென்மேலும் சாதனைகள் செய்திட பெரும் ஊக்கமளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பிறந்த உதயசங்கர், ரயில்வே துறையில் பணியாற்றியவர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் - கலைஞர்கள் சங்கத்தின் புதுமைப்பித்தன் விருது, விகடன் சிறுவர் இலக்கிய விருது, கலை இலக்கிய பெருமன்றத்தின் சிறுவர் இலக்கிய விருது, தமிழ்ப் பேராயம் அழ.வள்ளியப்பா விருது என ஏராளமான பாராட்டுக்குரிய படைப்புகளை தந்தவர்.
தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநில தலைவராக உள்ளார். தமுஎகச அமைப்பின் மாநில செயற்குழுவில் செயல்படுகிறார். தமிழ் இலக்கியத்திற்கான அவரின் பங்களிப்புகள் மென்மேலும் தொடர சாகித்ய பாலபுரஸ்கார் விருதும் பங்களிப்புச் செய்திடும்.
விருதுபெற்ற இருவரையும் சி.பி.ஐ(எம்) சார்பில் மீண்டும் பாராட்டி மகிழ்கிறோம்.
- கே.பாலகிருஷ்ணன்