tamilnadu

img

அரசு போக்குவரத்து ஊழியர்கள் ரூ.14 கோடி நிவாரண நிதி....

சென்னை:
தமிழக முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றும் 1 லட்சத்து 20 ஆயிரம் ஊழியர்கள் தங்களது ஒரு நாள் ஊதியத்தை வழங்கினர்.

தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்றுப் பரவலை குறைக்கின்ற வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் போர்க்கால அடிப்படையில் பல்வேறு தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் பயனாக, தற்பொழுது நோய் தொற்று வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது.  அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு தொடர் நடவடிக்கைகளுக்கு உதவுகின்ற வகையில், இயன்ற அளவிலான நிதி உதவியினை “முதலமைச்சரின் பொது நிவாரண நிதி”-க்கு வழங்குமாறு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.

முதலமைச்சரின் வேண்டுகோளை ஏற்று, தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் அரசு சார்ந்த தன்னாட்சி நிறுவனங்களில் பணியாற்றி வருகின்ற அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் சார்ந்துள்ள துறைகளின் சார்பில், ஒரு நாள் ஊதியமானது வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், தமிழ்நாடு அரசு அனைத்துப் போக்குவரத்துக் கழகங்கள், சாலைப் போக்குவரத்து நிறுவனம், தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம் மற்றும் பல்லவன் போக்குவரத்து அறிவுரைப் பணிக்குழு உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றுகின்ற, ஏறத்தாழ 1.20 லட்சம் பணியாளர்களின் ஒரு நாள் ஊதியமாக, 14 கோடியே 46 லட்சத்து 70 ஆயிரத்து 635 ரூபாய்க்கான காசோலையினை சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் வழங்கினார்.இந்நிகழ்வின் போது, போக்குவரத்துத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தயானந்த் கட்டாரியா மற்றும் போக்குவரத்துக் கழக உயர் அலுவலர்கள்  உடனிருந்தனர்.

இதேபோன்று தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் சார்பில் உதவியாளர்கள் ஒருநாள் ஊதியமாக ஒரு கோடியே 5 லட்சம் ரூபாய் வழங்கினர். இதற்கான காசோலையை வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் முதலமைச்சரிடம் வழங்கினார்.அதேபோல் சுற்றுலா, மாசு கட்டுப்பாட்டு வாரியம்  உள்ளிட்ட பல்வேறு துறை ஊழியர்களும் தங்களது ஒருநாள் ஊதியத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதி வழங்கினார். அதனை சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் முதலமைச்சர் ஸ்டாலினிடம் சென்னை தலைமைச் செயலகத்தில் வழங்கினார்.

;