tamilnadu

img

ஐஐடி மாணவர் சேர்க்கை விதிமுறைகளில் தளர்வு.... மத்திய அமைச்சர் அறிவிப்பு

சென்னை:
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கால்  ஐஐடி மாணவர் சேர்க்கை விதிமுறைகளில் தளர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களான ஐஐடிக்களில் படிக்க, கூட்டு சேர்க்கை வாரியம் எனப்படும் ஜேஏபி நடத்தும் ஜேஇஇ மேம்படுத்தப்பட்ட தேர்வுகளில் தேர்ச்சி பெற்று, முதல் 20 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும் .அல்லது 12-ம் வகுப்புப்பொதுத்தேர்வில் குறைந்தபட்சம் 75 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருப்பது அவசியம்.

கொரோனா பொதுமுடக்கப் பிரச்சனையால் ஏராளமான மாநிலங்களில் 12 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் 12 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் ஐஐடி மாணவர் சேர்க்கைக்கு அவசியமில்லை என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,‘’இந்தியா முழுவதும் ஏராளமான கல்வி வாரியங்கள் தங்களின் 12 ஆம் வகுப்புத் தேர்வைப் பகுதியளவு ரத்து
செய்துள்ளன. இந்நிலையில், ஐஐடி மாணவர்கள் சேர்க்கைக்கான விதிமுறைகளை இந்த ஆண்டில் ஜேஏபி தளர்த்தியுள்ளது.

ஜேஇஇ மேம்படுத்தப்பட்ட தேர்வுகளில் தேர்ச்சி பெறும் தகுதிவாய்ந்த மாணவர்கள், 12 ஆம் வகுப்பில் எவ்வளவு மதிப்பெண்கள் எடுத்திருந்தாலும் பிரச்சனையில்லை. அவர்கள் ஐஐடியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்’’ என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.தள்ளி வைக்கப்பட்ட ஜேஇஇ மெயின் தேர்வுகள் செப்டம்பர் 1 முதல் 6 ஆம் தேதி வரையிலும், ஜேஇஇ மேம்படுத்தப்பட்ட தேர்வு செப்டம்பர் 27 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

;