சென்னை, ஜூலை 14 சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் முற்றிலும் வறண்டு விட்டதால் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதையடுத்து கல் குவாரிகள், விவசாய கிணறுகள் போன்றவற்றில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு சப்ளை செய்யப்படுகிறது. தினமும் 525 மில்லியன் லிட்டர் தண்ணீர் சென்னை நகருக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இந்த தண்ணீர் போதுமானதாக இல்லை.வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள மேட்டு சக்கரக்குப்பம் நீரேற்று நிலையத்தில் இருந்து காவிரி நீரை ரயில் மூலம் சென்னைக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. அதற்கான பணி மும்முரமாக நடந்து முடிந்தது. வெள்ளியன்று காலை 50 டேங்கர்களில் 25லட்சம் லிட்டர் தண்ணீர் நிரப்பப்பட்டன. பின்னர் 50 டேங்கர்களையும் ஏற்றிக் கொண்டு ரெயில் சென்னைக்கு வந்தது. அந்த ரயில் வில்லிவாக்கம் ரயில் நிலையம் வந்து அடைந்த பிறகு அங்கு குழாய்கள் மூலம் கீழ்ப் பாக்கத்தில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு அனுப்பப்பட்டது.ரயிலில் தண்ணீர் கொண்டு வந்த 50 டேங்கர்களும் இரவு ஜோலார்பேட்டைக்கு அனுப்பப்பட்டன. சனிக்கிழமை காலை 8 மணிக்கு 2-வது முறையாக ரெயிலில் 25 லட்சம் லிட்டர் தண்ணீர் கொண்டு வரப்பட்டது. கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து பெரம்பூர், அண்ணா நகர், அயனாவரம், கொளத்தூர், கொரட்டூர், திருவல்லிக்கேணி ஆகிய பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு ரயிலில் வந்த தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயிலில் தினமும் 4 நடை வீதம் ஒருகோடி லிட்டர் தண்ணீர் கொண்டு வர முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஆனால் ரயில்களில் தண்ணீர் நிரப்ப 4 மணி நேரமும், பின்னர் சென்னைக்கு கொண்டு வர 4 மணி நேரமும், தண்ணீரை ரெயிலில் வெளியேற்ற 4 மணி நேரமும் ஆகிறது. இதனால் ஒரு நாளைக்கு 3 நடையே ரயிலை இயக்க முடியும் என்ற சூழ்நிலை நிலவுகிறது. இதன் மூலம் ஒரு நாளைக்கு 75லட்சம் லிட்டர்தண்ணீர் கொண்டு வர முடியும். இதுகுறித்து குடிநீர் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தினமும் 10 மில்லியன் லிட்டர் தண்ணீர் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் மெதுவாக விரிவுப்படுத்தப்படும். ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு 6 மாத காலம் தொடர்ந்து தண்ணீர் சப்ளை செய்யப்படும். சென்னை நகருக்கு தற்போது தினமும் 5கோடியே 25லட்சம் லிட்டர் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இப்போது ஜோலார்பேட்டையில் இருந்து கொண்டு வரப்படும் தண்ணீர் மூலம் கூடுதலாக சப்ளை செய்யப்படுகிறது. ஜோலார்பேட்டையில் இருந்து வந்த தண்ணீரில் ஒரு நபருக்கு நாள் ஒன்றுக்கு 60 லிட்டர் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டால் 50 ஆயிரம் பேர் பயன் அடைவார்கள். விரைவில் அதிகம் பேர் பயன் அடைவார்கள். தினமும் சப்ளை செய்யப்படும் தண்ணீர் அளவில் கூடுதலாகி உள்ளது. டேங்கர்கள் ஏற்றப்பட்ட இன்னொரு ரயில் கொண்டு வரப்படுகிறது. இந்த 2 ரயில்கள் மூலம் தினமும் 10 மில்லியன் லிட்டர் தண்ணீர் கொண்டு வருவதற்கு மிகவும் பயனாக இருக்கும் என்றார் அந்த அதிகாரி.