தமிழ் அலுவல் மொழி: மத்திய அரசுக்கு அழுத்தம்
ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசு அலுவலகங்களில் தமிழ்மொழியை அலுவல் மொழியாக்கிட மகாராஷ்டிரா மாநில அரசுபோல் தனி ஆணையம் அமைத்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்குமா ? 456 பக்கங்களை கொண்ட தேசிய புதிய கல்விக் கொள்கை இந்தி, ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. இதனை தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் மொழிப் பெயர்த்து வெளியிட மத்திய அரசுக்கு மாநில அரசு உரிய அழுத்தம் கொடுக்குமா? என்றும் திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு துணைக் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் க.பாண்டியராஜன்,“ மத்திய அரசு இருமொழி கொள்கை அடிப்படையில் ஆங்கிலம், இந்தியில் சுற்றறிக்கைகளை தமிழ்நாட்டிற்கு அனுப்புகிறது. இதுகுறித்து மத்திய அமைச்சரிடம் மாநில அரசு சார்பிலும் பேசப்பட்டது. தனிச்சொற்கள் குறித்து பிரச்சனை உள்ளது என்று மத்திய அமைச்சர் கூறியிருக்கிறார். மற்ற மொழி பேசுபவர்களுக்கு தமிழ் மொழியை கற்றுக்கொள்ள பயிற்சி அளிக்க உள்ளோம். மத்திய அரசு அலுவலகங்களில் தமிழை அலுவலக மொழியாக நடைமுறை படுத்த மகாராஷ்டிரா அரசை போல் நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து வருகிறோம் என்றார்.
நீலகிரியில் பல்நோக்கு மருத்துவமனை
நீலகிரி மாவட்டம் உதகமண்டலம் சுற்றுலா மையத்திற்கு இந்த சீசனில் லட்ச கணக்கானோர் வந்து சென்றனர். அங்கு நிகழ்ந்த சாலை விபத்துகளில் 40 பேர் பலியாகினர். இவர்களில் 25 பேர் சுற்றுலாப் பயணிகள். தலையில் பலத்த காயமடைந்தவர்களுக்கு உடனடியாக சிகிச்சையளிக்க அங்கு வசதி வாய்ப்புகள் இல்லை. எனவே, பல்நோக்கு மருத்துவமனையோ மருத்துவக்கல்லூரி மருத்துவமனையோ அமைக்க அரசு முன் வருமா என காங்கிரஸ் உறுப்பினர் கணேஷ் துணைக் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர், “மலைப்பகுதியில் மருத்துவ சேவையை உருவாக்கி கொடுப்பதே அரசின் கொள்கையாகும். அதன் அடிப்படையில் உறுப்பினர் கோரிக்கையை ஏற்று, நிதி நிலைமைக்கு ஏற்ப பரிசீலனை செய்து பல்நோக்கு மருத்துவமனை அமைப்பது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.
‘தட்கல்’ முறையில் மின் இணைப்பு: நிறுத்தமா?
விவசாயிகள் ரூ.3 லட்சம் செலுத்தினால் பம்பு செட்களுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்கும் தட்கல் முறையில் கடந்த ஆண்டு ஒருவருக்கு கூட இணைப்பு வழங்கப்படாதது ஏன்? என்றும் இதுவரைக்கும் எத்தனை விண்ணப்பங்கள் வந்துள்ளன? நிலுவையில் உள்ளவை எத்தனை என்று திமுக உறுப்பினர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் வினவினார். இதற்கு பதில் அளித்த மின்துறை அமைச்சர் தங்கமணி,“ ஆண்டுக்கு 10ஆயிரம் விவசாயகளுக்கு மின் இணைப்பு வழங்க தட்கல் திட்டம் கொண்டுவரப்பட்டது. கடந்த ஆண்டு விண்ணப் பித்தவர்களுக்கு கஜா புயல் பாதிப்பால் மின் இணைப்பு வழங்க முடியவில்லை. முந்தைய ஆண்டு ஆயிரம் பேருக்கு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. ஆக 11 ஆயிரம் பேருக்கு நடப்பாண்டில் மிண் இணைப்பு வழங்கப்படும். இத்திட்டம் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும்” என்றார்.
சுற்றுலா தலமாக மாறும் நீர் வீழ்ச்சிகள்!
விழுப்புரம் மாவட்டம் கல்வராயன்மலையில் கொடவந்துறை மேகம் நீர்வீழ்ச்சியை சுற்றுலா மையமாக அறிவித்து அடிப்படை வசதிகளை செய்து தர அரசு முன்வருமா? என்று திமுக உறுப்பினர் உதயசூரியன் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த சுற்றுலாத்துறை அமைச்சர் நடராஜன்,“ சுறுகலூர், சேரப்பட்டு கொடுவந்துரைஆகிய நீர்வீழ்ச்சிகள் கடல் மட்டத்திலிருந்து 3 ஆயிரம் அடி உயரத்தில் உள்ளன. மேலும் அவை அனைத்தும் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. வனத்துறையுடன் கலந்தோலோசித்து விட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.