tamilnadu

img

பொதுச் சொத்துக்கள் தனியார்மயம்: மறுபரிசீலனை செய்க... பிரதமருக்கு முதல்வர் கடிதம்....

சென்னை:
பொதுச் சொத்துகளைத் தனியார்மயமாக்கும் நடவடிக்கையை ஒன்றிய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்என பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:-பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துகளைத் தனியார்மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை மறுபரிசீலனை செய்யவலியுறுத்தி எழுதியுள்ள கடிதத்தில், “நம் நாட்டினுடைய பொதுத்துறை நிறுவனங்கள், நம் அனைவருடைய பொதுச்சொத்தாகும். அவற்றில் பலவும் இந்தியாவைத் தொழில்மயமான – தற்சார்புடைய நாடாக நிலைநிறுத்துவதில் முக்கியப் பங்கு வகிப்பவை. அத்தகைய பொதுத்துறை நிறுவனங்களை அமைப்பதற்கு, மாநிலங்களுக்குச் சொந்தமான அரசு நிலங்களோடு மக்களின் நிலங்களும் வழங்கப்பட்டுள்ளன. அதனால், அந்நிறுவனங்களின் மீது மக்களுக்குப் பெருமையும் உரிமையும் உள்ளது” என்று கூறியுள்ளார்.

மேலும், “இந்தப் பணமாக்கல் என்னும் நடவடிக்கை, நாட்டின் பொருளாதாரத்தின் மீதும்; தொடர்புடைய நிறுவனங்களின் பணியாளர்கள் மீதும்; இந்நிறுவனங்களைச் சார்ந்து இயங்கும் சிறு-குறுதொழில்துறை மீதும் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதும் தெரியவில்லை” என்றும் குறிப்பிட்டுள்ளார்.“நாட்டின் தற்போதைய பொருளாதார நிலையைவைத்துப் பார்க்கும்போது, இவ்வளவு பெரிய அளவிலான தனியார்மயமாக்கல் நடவடிக்கையை, எந்தப் பெயரிட்டு அழைத்தாலும், அது விலைமதிப்பற்ற அரசுச் சொத்துகள் ஒருசில குழுக்கள் அல்லது பெருநிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்குள் செல்வதற்கே வழிவகுக்கும்” என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.எனவே, ஒன்றிய அரசினுடைய பொதுச்சொத்துக்களைத் தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்யுமாறும், மேலும், இந்நிறுவனங்களுடன் தொடர்புடையவர்களுடனும் மாநில அரசுகளுடனும் கலந்தாலோசித்த பின்னரே இதுபோன்ற பெரிய முடிவுகளை மத்திய அரசு எடுக்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

;