tamilnadu

சுபஸ்ரீ வழக்கில் ஜாமீன் கோரிய விசாரணை ஒத்திவைப்பு

 சென்னை,அக்.17- பேனர் விழுந்து சுபஸ்ரீ மரணமடைந்த வழக்கில் ஜாமீன் கோரிய அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால், அவ ரது உறவினர் மேகநாதன் ஆகியோரது மனு  மீதான விசாரணையை, வருகிற 24ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இவர்களின் ஜாமீன் மனுக்களை செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றம் கடந்த 4ஆம் தேதி தள்ளுபடி செய்தது. இதையடுத்து, இருவரும், ஜாமீன் கோரி, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு வியாழனன்று(அக்.17) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, விதிமீறல் பேனர்கள் தொடர்பான வழக்கு வருகிற 23ஆம் தேதி விசாரணைக்கு வருவதால், அதன்பின்னர் பதிலளிக்க கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என காவல்துறை தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நடராஜன் கோரிக்கை வைத்தார். விதிமீறல் பேனர் வழக்கிற்கும், தங்கள் வழக்கிற்கும் தொடர்பில்லை என்பதால், தங்களது ஜாமீன் மனுவை விசாரிக்க வேண்டுமென ஜெயகோபால், மேகநாதன் தரப்பில் வாதிடப்பட்டது. இருப்பினும், காவல்துறை தரப்பு கோரிக்கையை ஏற்ற நீதிபதி சி.வி.கார்த்திகேயன், ஜாமீன் மனு மீதான விசாரணையை வருகிற 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.