tamilnadu

img

முதுகலை படிப்பு : இடங்களை அதிகரிக்க கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்....

சென்னை:
கல்லூரி முதுகலை படிப்பிற்கான இடங்களை அதிகரிக்கக் கோரி தமிழகம் முழுவதும் 5 மண்டலங்களில் இந்திய மாணவர் சங்கத்தினர் திங்களன்று (நவ.9)  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

படித்து முடித்த இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும், முதுநிலை படிப்பிற்கு கூடுதல் இடங்களை ஒதுக்க வேண்டும், அரியர் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு உடனடியாக மதிப்பெண் பட்டியலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம் ஆகிய 5 மண்டலங்களில் போராட்டம் நடைபெற்றது.இதன் ஒருபகுதியாக சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் சங்கத்தின் தலைவர் ஏ.டி.கண்ணன் கூறியதாவது:ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வழங்குவதாகக்கூறி ஆட்சிக்கு வந்த பாஜக, சுமார் 12 கோடி வேலைவாய்ப்புகளை பறித்துள்ளது. தமிழக வேலைவாய்ப்புகளை பிற மாநிலத்தவரை கொண்டு நிரப்புகின்றனர். இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை 24 சதவீதமாக உயர்ந்துள்ளது. வேலையின்மை, பொருளாதார நெருக்கடியை திசைதிருப்ப பாஜக வேல் யாத்திரை நடத்துகிறது. எனவே புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.அரியர் வைத்திருந்த மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாகவும், குறைந்தபட்ச மதிப்பெண் வழங்குவதாகவும் அரசு அறித்துள்ளது. அதன்படி மதிப்பெண் சான்றிதழை வழங்காமல் உள்ளது. தற்போது முதுநிலை படிப்பு மாணவர் சேர்க்கை நிறைவடையும் தருவாயில் உள்ளது. இதனால் மாணவர்கள் உயர் கல்வியில் சேர முடியாமல் தவிக்கின்றனர்.

எனவே, உடனடியாக மதிப்பெண் சான்றிதழை வழங்க வேண்டும். முதுநிலை படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.இதில் மத்தியக்குழு உறுப்பினர் ஜான்சி, மாவட்ட நிர்வாகிகள் தீ.சந்துரு, சுபாஷ் (தென்சென்னை), மிருதுளா (மத்தியசென்னை), இசக்கி, ராஜேந்திர பிரசாத் (வடசென்னை), தமிழ்பாரதி (காஞ்சிபுரம்), வசந்த் (திருவள்ளூர்), பார்த்திபன் (விழுப்புரம்), குமரவேல் (கடலூர்) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.