tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

கூட்டுறவு அங்காடிகளில் பொங்கல் சிறப்புத் தொகுப்பு  விற்பனை தொடக்கம்

சென்னை,டிச.18- தமிழக கூட்டுறவுத் துறை சார்பில் பொங்கல் சிறப்புத் தொகுப்பு விற்பனையை அமைச்சர் பெரியகருப்பன் புதனன்று(டிச.18) சென்னை தேனாம்பேட்டை காமதேனு கூட்டுறவு அங்காடியில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி விற்பனையைத் தொடங்கி வைத்தார்.

ரூ. 199-க்கு இனிப்பு பொங்கல் தொகுப்பில் பச்சரிசி, வெல்லம், ஏலக்காய், முந்திரி, உலர் திராட்சை, நெய், பாசிப்பருப்பு என ஏழு பொருட்கள் உள்ளன. ரூ. 499 -க்கு சிறப்பு பொங்கல் தொகுப்பில் மஞ்சள் தூள், சர்க்கரை,  துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, தனியா, புளி,  பொட்டுக்கடலை, மிளகாய் தூள், கடலை எண்ணெய், உளுத்தம் பருப்பு, மிளகு, வெந்தயம், சோம்பு, கடுகு,  மிளகாய், பெருங்காயத்தூள், உப்பு, சீரகம் 19 பொருட்கள் கொண்ட தொகுப்பாகும். ரூ. 999 பெரும் பொங்கல் தொகுப்பில் 35 பொருட்கள் உள்ளன.

புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கம்

சென்னை,டிச.18- சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், அரசுப் பள்ளிகளில் படித்து உயர் கல்வி பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் புதுமைப்பெண் திட்டத்தில் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக வங்கியாளர்கள், அரசு அலுவலர்கள், கல்லூரி தொடர்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை  அமைச்சர் பெ.கீதா ஜீவன் தலைமை வகித்தார்.

துறைச் செய லாளர் ஜெயஸ்ரீ முரளிதரன், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அமைச்சர் கீதா ஜீவன் பேசுகையில்,  “2024- 2025 ஆம் கல்வியாண்டு முதல் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வி பயின்று, உயர் கல்வியில் முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு மற்றும் இறுதியாண்டு பயிலும் அனைத்து மாணவி களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் வகையில் இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் டிசம்பர் 30 ஆம் தேதி நடைபெறும் அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார்” என்று தெரிவித்தார். 

ஆளுநர் மாளிகையை காங்கிரஸ் முற்றுகை 

சென்னை,டிச.18- அமெரிக்க நீதிமன்றத்தால் குற்றம்சாட்டப்பட்டுள்ள அதானியின் ஊழல் மோசடிகள் குறித்தும், மணிப்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பிரதமர் மோடி நேரில் சென்று சந்திக்காதது குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னை சைதாப்பேட்டை, பனகல் மாளிகை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் பலர் பங்கேற்றனர்.