தஞ்சையில் பட்டமளிப்பு விழாவில் மாணவர் சங்க தலைவர் மீது காவல்துறையினரின் அத்துமீறல் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல்துறை இயக்குநருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடிதம் எழுதியுள்ளது.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் காவல்துறை இயக்குநருக்கு அளித்துள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,
கடந்த 24.4.2023 அன்று தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள கரிகாலச் சோழன் அரங்கத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் ஆய்வியல் நிறைஞர் பட்டம் (எம்.பில்) பெறுவதற்காக அரவிந்தசாமி என்ற மாணவர் தனது பெற்றோர்களுடன் முன்கூட்டியே பணம் செலுத்திப் பதிவுசெய்த அடிப்படையில் பங்கேற்றுள்ளார். இவர் இந்திய மாணவர் சங்கத்தின் தமிழ்நாடு மாநில தலைவர். தற்போது திருவாரூரில் உள்ள தமிழ்நாடு பல்கலைக்கழகத்தில் முதுகலை மாஸ் கம்யூனிகேசன் படித்து வருகிறார். முதல் தலைமுறை பட்டதாரியும் ஆவார்.
24.4.2023 அன்று காலை 8.30 மணிக்கே அரங்கத்திற்குள் அமர்ந்திருந்த அரவிந்தசாமியை, இந்திய மாணவர் சங்கத் தலைவர் என்பதாலும், மேதகு ஆளுநர் ஆர்.என். ரவி அவர்கள் விழாவில் கலந்து கொள்வதில், கருப்புக் கொடி காட்ட வாய்ப்பு இருப்பதாக சந்தேகத்தின் பேரில் அழைத்துச் சென்று தனி அறையில் அடைத்து அவரது உள்ளாடைகளை கழற்றி, வக்கிரப் புத்தியுடன், கருப்புக்கொடி ஒளித்து வைத்துள்ளாரா என சோதனை செய்துள்ளனர். அவரை கடைசி வரை பட்டம் வாங்க அனுமதிக்கவில்லை என்பது மிக மோசமான மனித உரிமை மீறல் நடவடிக்கையாகும்.
மேதகு ஆளுநருக்கு பாதுகாப்பு அளிப்பதிலோ சட்டம், ஒழுங்கை பாதுகாப்பதிலோ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாறுபடவில்லை. ஆனால், சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு என்பதன் பேரால் காவல்துறை சட்டத்தை மீறுவதை ஏற்க இயலாது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
மேதகு ஆளுநர் அவர்கள் பட்டமளிப்பு விழா முடித்து சென்றபின், அரவிந்தசாமியின் பட்டம் அங்குள்ள மேஜை மீது வீசப்பட்டு கிடந்துள்ளது. இதுவும் அவரை இழிவுபடுத்தும் நோக்கத்துடன் செய்யப்பட்டதாகவே கருத வேண்டியுள்ளது. அத்துமீறலில் ஈடுபட்ட அதிகாரிகளை அரவிந்தசாமியால் அடையாளம் காட்ட கூடிய பெயர் தெரியாத 10க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.