மோடி அரசின் 8 ஆண்டு கொடுமைகளை கண்டித்து மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ண்னன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது
மோடி தலைமையிலான ஒன்றிய அரசின் ஆட்சியில், கடந்த 8 ஆண்டுகளில் பெரும்பகுதி மக்களின் மீது கடும் பொருளாதார சுமைகளை ஏற்றி வைத்திருப்பது, உச்சகட்ட வேலையின்மை, பெட்ரோல்-டீசல்-சமையல் எரிவாயு உள்ளிட்டு அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் மீது செங்குத்தான விலை உயர்வு, பொதுத்துறை தனியார்மயம், தொழிலாளர், தொழிற்சங்க உரிமை பறிப்பு, விவசாயிகள் மீதான கடன் சுமை, சிறுபான்மையினர் மீது தாக்குதல், கருப்பு சட்டங்கள், ஊடகங்களுக்கு அச்சுறுத்தல், பாசிச தன்மை கொண்ட எதேச்சாதிகார நடவடிக்கைகள், பெண்கள், குழந்தைகள் மீது அதிகரித்து வரும் வன்முறை, பட்டியலின-பழங்குடியின மக்கள் மீதான தாக்குதல்கள், வாழ்வாதாரம் பறிப்பு உள்ளிட்ட கார்ப்பரேட் ஆதரவு மதவெறி கொள்கைகளை அம்பலப்படுத்தி, மாற்று கொள்கைகளை முன்வைத்து 2022 ஆகஸ்ட் 25-31 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்திட மாநிலக்குழு முடிவு செய்துள்ளது.