tamilnadu

img

கோவை மாநகரில் அமைதி நிலவ, மத நல்லிணக்கம் ஏற்பட முன்முயற்சி எடுத்தவர்... தோழர் கே.சி. கருணாகரன் மறைவுக்கு சிபிஎம் மாநிலக்குழு புகழஞ்சலி

சென்னை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் கே.சி.கருணாகரன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது:கட்சியின் மூத்த தோழரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட முன்னாள் செயலாளரும், முன்னாள் மாநிலக்குழு உறுப்பினருமான தோழர் கேசிகே என்று அழைக்கப்படும் தோழர் கே.சி.கருணாகரன் (வயது74)உடல் நலக்குறைவால் வெள்ளியன்று (அக்.9) நள்ளிரவு காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும்அதிர்ச்சியுற்றோம்.

அவரது மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்மாநிலக்குழு அஞ்சலி செலுத்துவதுடன்  ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறது.இளம் வயதிலேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அதில் தன்னை இணைத்துக்கொண்டவர். துவக்க காலத்தில்சோசலிஸ்ட் வாலிபர் முன்னணியில் தன்னை இணைத்துக்கொண்டு, அதன் மாநில தலைவராக சிறப்பாக செயல்பட்டவர். மாநிலம் முழுவதும் சென்று இளைஞர்களை அணிதிரட்டியவர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்து, நீண்டகாலம் அதன் மாநில நிர்வாகியாகசெயல்பட்டவர்.  1997 முதல் 2001வரை கட்சியின் கோவை மாவட்ட செயலாளராக பணியாற்றியவர்.  23 ஆண்டு காலம் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராக பணியாற்றியவர். தற்போது கோவை மாவட்டக்குழு உறுப்பினராக பணியாற்றி வந்தார்.சோசலிஸ்ட் வாலிபர் முன்னணியில் இவர் தலைவராக இருந்தபொழுது, வேலையில்லா இளைஞர்களுக்கு நிவாரணம் வழங்ககோரி மாநிலந்தழுவிய அளவில்சைக்கிள் பிரச்சாரம் நடைபெற்றது.அதன் விளைவாக அப்போதையமுதல்வர் எம்ஜிஆர் இளைஞர்களுக்கு வேலையில்லா கால  நிவாரணம் அறிவிக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.  காடம்பாறை மின்நிலைய கட்டுமானப்பணியில் தினக்கூலி தொழிலாளியாக பணியாற்றிய அவர், தொழிற்சங்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு காடம்பாறை தினக்கூலி தொழிலாளர்களின் நிரந்தரத்திற்காக தோழர் கே.ரமணி அவர்களுடன் தலைமையேற்று போராட்டத்தை நடத்தியவர்.

தோழர் கே.சி.கருணாகரன்மாவட்டச்செயலாளராக பணியாற்றியகாலத்தில் அனைத்துக்கட்சியையும் ஒருங்கிணைத்து, கோவைமாநகரத்தில் அமைதி நிலவவும்,மதநல்லிணக்கம்ஏற்படவும்முன்முயற்சி எடுத்தவர்.2001 முதல் 2006 வரை சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியவர். இவர் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிய காலத்தில், கோவை மாவட்டத்தில் வரன்முறைப் படுத்தாமல் இருந்த இடங்களை  வரன்முறைப்படுத்த சட்டமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுத்து அதை சட்டமாக்க காரணமாக இருந்தவர். இதன் மூலம் ஆயிரக்கணக்கான ஏழைமற்றும் நடுத்தர மக்கள் பயன்பெற்றனர். உழைப்பாளி மக்களின் நலன்களுக்காகவும், பஞ்சாலைத் தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்காகவும் சட்டமன்றத்தில்குரல் கொடுத்தவர்.சிறந்த மேடைப்பேச்சாளர். மிசா காலத்தில் ஓராண்டு காலம் தலைமறைவு வாழ்க்கையில் இருந்தவர். 50 ஆண்டுகாலம் முழுநேர ஊழியராக பணியாற்றிய தோழர்கே.சி.கருணாகரன் அனைவரிடமும் அன்பாக பழகக்கூடியவர். எளிமையானவர். அவரது இழப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், கோவை மாவட்ட மக்களுக்கும் ஏற்பட்ட இழப்பாகும். அவரது மறைவால் வாடும் அவரது மகள் செம்மலர், மகன் மகேஷ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும், கோவை மாவட்ட தோழர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு தனது ஆழ்ந்தஅனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறது.