tamilnadu

img

8 ஊரு மக்களும்... 4 கி.மீ.சாலையும்...

பார்த்துப் பார்த்து சொந்த வீடு கட்டிய ஒருவன் அப்படி அழகுற கட்டிய வீட்டில் குரங்கை குடி வைத்தானாம். இப்படித்தான் ஆனது வனத்தையும்,  மலைகளையும் கொள்ளையடிப்போரிடம் இருந்து பாதுகாப்பதற்காக போடப்பட்ட சட்டங்களும், வனத்துறையின் நடவடிக்கைகளும். வனத்தை வளர்த்து பாதுகாத்த சொந்த மக்களுக்கு எதிராகவே இவை ஆளும் அரசுகளால் பயன்படுத்தப் படுகின்றன. இந்த நாட்டு மக்களுக்காகவே அரசும், நாடும், இயற்கை வளங்களும். ஆனால் நடைமுறையில் இந்த நாட்டின் இயற்கை வளங்கள் மக்களுக்குப் பயன்படாத வகையில் அரசால் தடுக்கப்படுகின்றது. இதற்கு சட்டத்தின் பிரிவுகள் தந்திரமாக ஆளும் அதிகார வர்க்கத்தினரால் பயன்படுத்தப்படுகிறது.

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி வட்டத்தை சேர்ந்த சிறு நாகலூர், கொட்டையூர் நின்னையூர், சித்தாத்தூர் குருபீட புரம், சின்ன மாந்தாங்கல் வாணியந்தாங்கல் போன்ற ஏராளமான கிராமங்களில் வசிக்கும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.  இக்கிராமங்களுக்கு மையமாக கூத்தக்குடி என்ற ஊர் உள்ளது. இங்கு தான் அரசு மருத்துவமனை, இந்தியன் வங்கி, ஆசனூர், விருத்தாச்சலம், கள்ளக்குறிச்சி, செல்ல பேருந்து வசதி, கால்நடை மருத்துவமனை, அரசு மேல்நிலைப்பள்ளி என அமைந்துள்ளது. முக்கியமாக கூத்தக்குடியில்தான் ரயில் நிலையம் அமைந்துள்ளது எனவே கிட்டத்தட்ட எட்டு கிராமங்களுக்கு மேற்பட்ட மக்கள் இந்த கூத்தக்குடிக்கு தினசரி வந்து செல்ல வேண்டிய தேவை உள்ளது. இவ்வூர்களிலிருந்து செல்லும் வழியில் வாணியந்தாங்களுக்கு அடுத்தது கூத்தக்குடி காப்புக் காடு அமைந்துள்ளது. இதற்கு நடுவில் நான்கு கிலோ மீட்டர் தார்ச்சாலை அமைத்து முடித்தால்தான் இக்கிராம மக்கள் அனைவரும் கூத்தக்குடிக்கு செல்ல முடியும்.

ஆனால், வனத்துறை இப்பகுதியை காப்புக்காடு என அறிவித்து சாலை அமைக்க அனுமதி மறுத்து வருகிறது. இந்நிலையில் உடையநாச்சி, உச்சிமேடு, முகமதியர்பேட்டை, இராமநாதபுரம் என்று பல ஊர்களின் வழியாக கிட்டத்தட்ட 10 கிலோ மீட்டருக்கு மேல் சுற்றி தான் இக்கிராம மக்கள் அரசின் நலத்திட்டங்களை பெறவும் அரசுப் பணிகளை மேற்கொள்ளவும் அத்தியாவசிய பணிகளுக்கு சென்றிட வேண்டும். காப்புக்காடு பகுதியில் நான்கு கிலோ மீட்டர் சாலை அமைக்க இயலாத தால் அவசர ஊர்தியான 108 மற்றும் ஆட்டோக்கள், வாடகை கார்,  பேருந்து என எதுவும் இக்கிராமத்திற்கு வருவதில்லை கூப்பிட்டாலும் 10, 12 கிலோ மீட்டர் சுற்றிவர வேண்டும் என வாடகையும் கூடுதலாக கேட்கி றார்கள். பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ மாணவியரின் நிலையோ இன்னும் பரிதாபம். எனவே குடிமக்களை பாது காக்க, அவர்களுக்கான வசதிகளை மேம்படுத்த கூத்தக்குடி காப்புக்காட்டில் 4 கி. மீட்டர் தூரம் சாலை அமைத்திட விழுப்புரம் மாவட்ட வனத்துறை அனுமதி அளிக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் அனை வரும் ஒரே குரலில் கோரிக்கை வைக்கின்றனர். இதில் அதிமுக, திமுக, கம்யூனிஸ்ட் என அனைத்து கட்சிகளும் ஒன்றுபட்டு விரைவில் போராட்டம் நடத்தவும் தயாராக உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கள்ளக்குறிச்சி வட்டச் செயலாளர் பி.மணி தெரிவித்தார். வனத்துறை சாலை அமைக்க அனு மதிக்குமா அல்லது போராட்டத்தை தூண்டுமா?    

    -வி.சாமிநாதன்.