tamilnadu

img

உள்ளாட்சி தேர்தல் செலவு கணக்கை அடுத்த 30 நாள்களில் தாக்கல் செய்ய உத்தரவு  

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டவர்கள், செலவுக் கணக்கை அடுத்த 30 நாள்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  

தமிழ்நாட்டில், 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கான தேர்தல் கடந்த 19 ஆம் தேதி நடைபெற்றது. அதனை தொடர்ந்து பிப்.22 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் தமிழகம் முழுவதும் உள்ள 268 மையங்களில் எண்ணப்பட்டு வந்தது. இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியைச் சேர்ந்த வேட்பாளர்கள் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.  

இந்த நிலையில் தேர்தலில் போட்டியிட்டவர்கள், போட்டியின்றி தேர்வான வேட்பாளர்கள் செலவு கணக்கை அடுத்த 30 நாள்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  

மேலும் கணக்குகளை சரியாக தாக்கல் செய்யாத வேட்பாளர்கள் அடுத்த 3 ஆண்டுகளுக்கு எந்த விதமான தேர்தலிலும் போட்டியிட முடியாது. தாக்கல் செய்யாதவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.