tamilnadu

img

ஓபிஎஸ் அந்தர் பல்டி... சசிகலா நிரபராதியாம்....

சென்னை:
அதிமுக பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெ.ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி மரணமடைந்தார். அப்போது, முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம்-சசிகலா இடையே பதவி சண்டை வெடித்ததால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் ஓபிஎஸ்.

 2017 பிப்ரவரி 7ஆம் தேதி திடீரென்று ஜெயலலிதா நினைவிடத்திற்குச் சென்று மவுன விரதம் இருந்தார். பின்னர் நான் தர்மயுத்தம் மேற்கொண்டுள்ளேன் என்றார். கட்சி இரண்டாக பிளவு பட்டது. ஒரு பிரிவு சசிகலா தலைமையில் கூவத்தூர் பங்களாவில் தங்கவைக்கப்பட்டது. அந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரானார். சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்று முதலமைச்சரானார்.

பிறகு, சசிகலாவைக் கட்சியிலிருந்து நீக்க வேண்டும்; ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளது. எனவே மரணத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று ஓபிஎஸ் கோரிக்கை முன்வைத்தார். இதனால் ஓபிஎஸ்-இபிஎஸ் என அணி பிரிந்தது, சசிகலா சிறைக்கு போனதும் இருவரும் அண்ணன்-தம்பியாக மாறி சசிகலாவை ஓரம்கட்டியது எல்லாம் தமிழக மக்கள் அறிந்த ஒன்று தான்.இந்நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திடம் சசிகலா மீது உங்களுக்கு இன்னும் வருத்தங்கள் உண்டா என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஓபிஎஸ், ‘‘எனக்கு அவர் மீது எந்த வருத்தமும் இல்லை. இப்போது இல்லை, எப்பவுமே இருந்தது இல்லை. ஜெயலலிதா மறைவுக்கு பின்னால்சில சந்தேகங்கள் அவர் மீதுஇருந்தது. அம்மா சமாதியில்நான் அளித்த பேட்டியை பார்த்தால் உங்களுக்கு தெரியும். சில சூழல்களில் அம்மா மரணத்தில் அவருக்கு கெட்ட பெயர் வரக்கூடிய சூழல் இருக்கிறது. அதற்காக ஒரு நீதி விசாரணை வைத்து அவர் நிரபராதி என்று நிரூபித்தால் அவருடைய கெட்டபெயர் விடுபடும் என்பதைத் தான் நான் சொல்லிருக்கிறேன்” என்றார்.தொடர்ந்து பேசிய அவரிடம், சசிகலா மீது உங்களுக்கு சந்தேகம் இருந்தது இல்லையா என்ற கேள்விக்கு, ‘‘எனக்கு அவர் மீது எந்தசந்தேகமும் இருந்ததில்லை. நான் அவருடனும், அம்மாவுடனும் பயணித்திருக்கிறேன். 30 ஆண்டுகள் அம்மாவுடன் அவர் இருந்திருக்கிறார்கள். அவர் மீது எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை” என்றார்.

;