tamilnadu

img

ரெட்டை ஏரி கரையில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்

சென்னை, ஜூலை 24- உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் புழல் அருகே உள்ள  ரெட்டேரி கரையில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற வந்த அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் சிலர் தீக்குளிக்க முயன்றனர்.

சென்னை மாநகராட்சி மாதவரம்  மண்டலம் 3க்கு உட்பட்ட ரெட்டை  ஏரிக்கு உட்பட்ட எம்.ஜி.ஆர். நகரில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து அந்த பகுதி மக்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இந்நிலையில் நீதிமன்ற உத்தர வின் பேரில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 150க்கும் மேற்பட்ட வீடுகளை அகற்ற காவல்துறை, வருவாய்த் துறை, தீயணைப்புத் துறை உதவியுடன் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அங்கு சென்றனர். இதற்கு அப்பகுதி  மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, பல ஆண்டுகளாக வசித்து வரும் இடத்தில் இருந்து திடீரென வெளி யேற வேண்டும் என்றால் எங்கு செல்வது என கேள்வி எழுப்பி அதிகாரி களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் போதிய அவகாசம் அளிக்க வேண்டும் என்றும், மாற்று இடம் வழங்கி விட்டு வீடுகளை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். அப்போது சில இளைஞர்கள் தங்களது உடலில் மண்ணெண்ணெய் மற்றும் டீசலை ஊற்றி கொண்டு தீக்குளிக்க முற்பட்டனர். உடனடியாக காவல் துறையினர் அவர்களிடம் இருந்த டீசல் கேனை பிடுங்கி அவர்கள் மீது  தண்ணீரை ஊற்றினர். பெண் ஒரு வரும் தற்கொலைக்கு முயன்று மயங்கிய நிலையில் காவல் துறை யினர் அவரையும் மீட்டு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே நீதிமன்றம் அறிவித் திருந்த 150 வீடுகளில் 43 வீடுகளை  அதிகாரிகள் இடித்து அப்புறப்படுத்தி னர். மேலும் வியாழக்கிழமை விநாய கபுரம் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்ற உள்ளதாக கூறப்படு கிறது.

மாற்று இடம் வழங்க சிபிஎம் கோரிக்கை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன் கூறுகையில், நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை அப்புறப்படுத்துவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. அதே நேரம் பல ஆண்டுகளாக குடியிருப்பவர்களை திடீரென அப்புறப்படுத்தி னால் அவர்கள் எங்கு செல்ல முடியும். குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படும். மேலும் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும். எனவே அவர்களுக்கு மாற்று இடம் வழங்கி விட்டு ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் முதலமைச்சர் இதில் தலையிட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதுவரை வீடுகளை இடிக்க வேண்டாம் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.